Wednesday, March 25, 2026

அவா அறுத்தல்--37

 -------------------------------------------------------

அவா அறுத்தல்--37 

------------------------------------------------------------

பிறவித் துன்பம் வருவதற்கு

ஆசை தானே வித்தாகும்!


பிறவா நிலையை நாம்காண

பொருள்மேல் பற்றை விடவேண்டும்!


ஆசை இன்றி வாழ்கின்ற

பொன்மனம் ஒன்றே நற்செல்வம்!


அதற்கு நிகரோ இவ்வுலகில்

எந்தச் செல்வமும் கிடையாது!


ஆசை இல்லா நிலையொன்றே

தூய்மை போற்றும் நிலையாகும்!


வாய்மை பேசும் ஒழுக்கத்தால்

தூய்மை நிலையை அடைந்திடலாம்!


ஆசையை நீக்கிய மாந்தரைத்தான்

பற்றே இல்லா மாந்தரென்பார்!


ஆசை கொண்டே வாழ்பவரை

பற்றற் றோரெனச் சொல்வதில்லை!


வஞ்சனை செய்யத் தூண்டுவது

நெஞ்சில் படரும் ஆசைதான்!


ஆசைப் படுவதற் கஞ்சுவதே

அகிலம் போற்றும் பண்பாகும்!


ஆசையை நீக்கு நீயிங்கே

விரும்பும் வாழ்க்கை கைகூடும்!


ஆசைத் துன்பம் பெருந்துன்பம்!

ஆசையை விட்டால் பேரின்பம்!


அடங்கா ஆசையை அடக்கிவிடு!

நீங்கா இன்ப வாழ்வமையும்!


மதுரை பாபாராஜ்





0 Comments:

Post a Comment

<< Home