Wednesday, March 25, 2026

ஊழ்--38

 அறத்துப்பால் நிறைவு!

----------------------------------------------------------

ஊழ்--38

------------------------------------------------------

வளத்தை வளர்க்கும் உழைப்பிங்கே!

வளத்தை அழிக்கும் சோம்பல்தான்!

அறிவைக் கெடுப்பது ஊழ்வினைதான்!

அதனால் பொருளை இழந்திடுவார்!

அறிவைக் கொடுப்பதும் ஊழ்வினையே!

அதனால் பொருள்களைச் சேர்த்திடுவார்!

நூல்களை நுட்பமாய்க் கற்றாலும்

ஊழ்வினைத் தூண்டி முன்பிருந்த

அறியா மைக்கே கொடிபிடிக்கும்!


செல்வம் படைத்தவர் இருக்கின்றார்!

அறிவு படைத்தவர் இருக்கின்றார்!


இதற்குக் காரணம் ஊழ்தானே!

ஊழின் ஆட்டம் இதுதானே!


நல்லவை தீயவை ஆகலாம்!

தீயவை நல்லவை ஆகலாம்!

முடிவுகள் இங்கே முரணாகும்

இதற்குக் காரணம் ஊழாகும்!


நமக்கே உரிய செல்வங்கள்

என்றும் நம்முடன் தங்கிவிடும்!

நமக்கில் லாத செல்வங்கள்

நம்மை விட்டே நீங்கிவிடும்!


கோடிச் செல்வம் இருந்தாலும்

விதிஇருந் தால்தான் அனுபவிப்போம்!

துன்பம் வந்தே துளைத்தெடுத்தால்

ஏழையும் நாடுவான் துறவறத்தை!


நல்லவை நடந்தால் துள்ளுவதும்

தீயவை நடந்தால் துவள்வதுவும்

கொள்ளும் மனநிலை தவறாகும்                                                                                                    சமநிலை ஏற்கக் கற்றுக்கொள்!

விதியை விலக்க முடியாது!

விதியே வாழ்க்கை மறவாதே!


0 Comments:

Post a Comment

<< Home