Friday, March 27, 2020

இவர்களை வணங்குவோம் வாழ்த்துவோம்!

மருத்துவர்/ செவிலியர்!

கொரோனாவால் பாதித்த மாந்தரின் நோய்
வரம்பினை ஆராய்ந்து தக்க சிகிச்சை,
மருந்தை அளித்துப் பராமரித்து நாளும்
அருகில் இருந்து கவனிக்கும் தொண்டை
உயிரைப் பணயமாக்கி மேற்கொள்ளும் பண்பைப்
புவிமக்கள் போற்றுகின்றார் சூழ்ந்து.

காவல்துறை!

காவலர்கள் ஆடவரா இல்லை மகளிரா
கால்கடுக்க சாலைகளில் நின்றுகொண்டு சட்டத்தை
ஊரில் நடைமுறைக்குக் கொண்டுவரும் தொண்டுகளை
தங்கள் உயிரைப் பணயமாக்கிச் செய்கின்றார்!
மக்கள் கொரோனாதான் என்செய்யும் என்றெண்ணி
இப்பக்கம் அப்பக்கம் செல்கின்றார் மீறுகின்றார்!
அக்கறையாய் ஓடிஓடி வேண்டுகின்றார் நோய்காக்க!
தக்கதுணை யானவரை  வாழ்த்து.

துப்புரவாளர்!

தொற்றிப் படரும் கொரோனாதான் என்றாலும்
அக்கறையாய் நம்நாட்டைத் தூய்மையாய் இப்பொழுதும்
எவ்வித மாசுமின்றி நோய் பரவாமல்
எல்லா உதவிகளையும்  செய்யும் பெருந்தன்மை
உள்ளத்தில்  ஊன்ற உயிரைப் பணயமாக்கி
பல்வேறு துப்புரவுத் தொண்டுகளைச் செய்கின்றார்!
நல்லவரை நற்றமிழால் வாழ்த்து.

இல்லத்தரசிகள்!

நாமெல்லாம் வீட்டில் முடங்கி இருக்கின்றோம்!
ஊரை உலுக்கும் கொரோனாவோ நோக்காடோ
யாருக்கு வந்தாலும் காலைமுதல் மாலைவரை
வேளைக்குப் பசிதணிக்க சிற்றுண்டி, சாப்பாட்டை
தேர்வுசெய்து நன்கு சமைத்து வழங்குகின்ற
வேர்போன்ற இல்லத் தரசிகளை வாழ்த்துவோம்!
வாழ்க பசிப்பிணி போக்கும் மருத்துவர்கள்!
பார்போற்ற வாழ்வார் மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home