Saturday, March 28, 2026

குழந்தைகளுக்கு குறளமுதம் 25

 குழந்தைகளுக்கு குறளமுதம் 25

குறள் 25:

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு (65).


அன்புத் தோழி அன்னம்மா!

உந்தன் குழந்தைக் கன்னலா?


கட்டித் தழுவிக் கொஞ்சுகின்றாய்!

முத்தம் தந்தே மகிழ்கின்றாய்!


மழலைப் பேச்சை ரசிக்கின்றாய்!

மயங்கி மயங்கிச் சிரிக்கின்றாய்!


புதுப்புது அர்த்தம் தருகிறாய்!

மொழி பெயர்த்து மகிழ்கிறாய்!


விட்டு விலக மறுக்கின்றாய்!

யானை போல நடக்கின்றாய்!


முதுகில் சுமந்து களிக்கின்றாய்!

தூக்கிப் போட்டுப் பிடிக்கின்றாய்!


ஆமா ஆமா  பொன்னம்மா!

இதற்கு ஈடும் உள்ளதோ?


செல்லத் தோட விளையாண்டால் 

நேரம் போத வில்லையே!


குழந்தையைத் தழுவிக் கொஞ்சுவதே

உடலுக் கின்ப மாகுமாம்!


மழலைப் பேச்சைக் கேட்பதே

பெற்றோர் செவிக்கு இன்பமாம்!


வள்ளுவர் வாய்க்குச் சக்கரை

போட வேண்டும் பொன்னம்மா

0 Comments:

Post a Comment

<< Home