Saturday, March 28, 2026

குழந்தைகளுக்கு குறளமுதம் 26

 குழந்தைகளுக்கு குறளமுதம் 26

குறள் 26:

குழலினி தியாழினி தென்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர். (66)


எந்தன் தோழி தேன்மொழியே!

இசைநி கழ்ச்சி போகின்றேன்


குழலிசை வித்தகர் இசைக்கின்றார்

கேட்டு் ரசிக்கப் போகின்றேன்!


யாழிசை என்றே இலக்கியத்தில்

நாமும் வகுப்பில் படித்துள்ளோம்!


அந்த யாழை மீட்டித்தான்

புதிதாய் ஒருவர் இசைக்கின்றார்!


வந்தால் கேட்டு்  மகிழலாம்

வருகின் றாயா என்தோழி?


எந்தன் குழந்தை பேசுகின்ற

தேனினும் இனிய மழலைமுன்


இந்த இசையோ ஒன்றுமில்லை

மழலை தானே இனிமையாம்!


மழலைச் சொல்லைக் கேட்காதோர்

குழலும் யாழும் இனிதென்பார்


இப்படித் தானே கூறுகின்றார்

நமது வள்ளுவர் பேரறிஞர்!


நாளை நீயும் உன்குழந்தை

மழலைப் பேச்சைக் கேட்பாயே!


அன்று நீயும் என்கருத்தை

ஏற்றே போற்றுவாய் என்தோழி!


உண்மை தாம்மா என்தோழி

உள்ளம் மயங்கிடும் மழலைமுன்!


0 Comments:

Post a Comment

<< Home