Wednesday, March 25, 2026

இறைமாட்சி--39

 ---------------------------------------------------

  இறைமாட்சி--39             பொருட்பால்--

------------------------------------------------------------

அன்பே படையாம் அறிவே அமைச்சாம்

 நட்பே வளமாம் இவைகளை இங்கே

அரணெனக் கொண்டால் நிமிர்ந்தே வாழலாம்!


எண்ணித் துணிதல் ஏழைக்கு கொடுத்தல்

வருமுன் காத்தல் ஊக்கமுடன் வாழ்தல்

வாழ்வின் அருமைப் பண்புகளாம்!


சோம்பல் ஒழித்தல் கல்வியில் செம்மை

உள்ளத் துணிவு இவைகள் மூன்றுமே

காக்கும் படைகள் என்றே அறிந்திடு!


அறநெறி போற்றி குற்றந் தடுத்து

வீரமுடன் வாழ்தல் வாழ்க்கைக் கழகாகும்!


வரவைப் பெருக்கி வந்ததைக் காத்து

தேவைக் கேற்ப பொருள்களை வாங்கி

வாழ்வை அமைத்தல் அருமை இல்லறமாம்!


எளிமை இனிமை எண்ணத் தூய்மை

 நல்மனம் கொண்டால் உலகம் புகழும்!

இன்சொல் பேசி கனிவுடன் ஈந்தால்

போற்றிப் புகழும் உலகம் என்றும்!

தன்னலம் இன்றி நடுநிலை காத்தால்

 மாந்தருள் மாணிக்கம் என்றே புகழ்வார்!


கடுஞ்சொல் தாக்கி உலுக்கி னாலும்

 பொறுமை காத்தால் வாழ்வே தழைக்கும்!

அன்பு, கருணை, நீதி, அரவணைப்பு

வாழ்க்கைப் பாதையின் ஒளிதான் அவைகள்!


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home