Tuesday, March 24, 2026

வாழ்க்கைத்துணைநலம்

 வாழ்க்கைத் துணநலம்--6

-----------------------------------------------

இல்லறம் சிறப்பது பெண்களாலே

-------------------------------------------------------

பிறந்தவீடு புகுந்தவீடு போற்றிடவே

வருவாய்க்குள் வாழ்பவளே நல்மனைவி!

பண்பற்ற இல்லாளின் இல்லத்தில்

பொன்பொருள் சேர்ந்தாலும் மதிப்பில்லை!

கற்பென்னும் மனவுறுதி கொண்டவளே

பெண்குலத்தின் ஒளிவிளக்காய்த் திகழ்கின்றாள்!

கணவனையே தெய்வமாக மதிப்பவளோ

பெய்யென்றால் பெய்துவிடும் நல்மழைதான்!

கணவனின் குடும்பத்தின் புகழ்தன்னைக்

காப்பவளே பெண்ணாவாள் மண்ணுலகில்!

மங்கையின் உடலுக்கே சிறைக்காப்பு!

உள்ளத்தின் சிந்தனைக்கு முடியாது!

பேரடக்கப் பண்புகளால் மங்கையிங்கே

காக்கின்ற நெறிமுறைதான் சிறப்பாகும்!

மண்ணுலகில் கணவனையே தெய்வமாக

எண்ணிவாழ்ந்தால் விண்ணுலகும் வாழ்த்திநிற்கும்!

கணவனின் புகழ்விளக்கைக் காக்காத

காரிகை அமைந்துவிட்டால் பகைவர்முன்

கணவருக்குச் சிங்கநடை இல்லையம்மா!

மனைவியே இல்லறத்தின் மங்கலமாம்!

பிள்ளைகள் குடும்பத்தின் அணிகலனாம்!

மதுரை பாபாராஜ்



0 Comments:

Post a Comment

<< Home