Wednesday, March 25, 2026

பொறை உடைமை--16

 ---------------------------------------------------------

பொறை உடைமை--16

----------------------------------------------------------

தன்னைத் தோண்டும் மாந்தரையும்

தாங்கும் நிலம்போல் நாமிங்கே

நம்மை இகழ்ந்து பேசுவோரை

என்றும் பொறுத்தல் பண்பாகும்!


அடுத்தவர் செய்யும் தீங்குகளை 

உடனே மறந்தால் நல்லதுதான்!


விருந்தளிக் காத நிலைதானே

உண்மை யான வறுமையாம்!


மற்றவர் கோபத்தைத் தாங்குவதே

உலகில் போற்றும் வலிமையாம்!


பொறுமை குணமுடன் வாழ்பவரை

பொன்மன மாந்தராய்ப் புகழ்ந்திடுவார்!


தீமைக்குத் தீமை மதிப்பில்லை!

பொறுத்துப் போனால் மதிப்புண்டு!


சீண்டு  வோரை தண்டித்தால்

ஒருநாள் மட்டும் இன்பந்தான்!

பொறுத்து வாழும் நிலையெடுத்தால்

உலகில் என்றும் பெருமைதான்!


நம்மை வாட்டி எடுத்தாலும்

பழிக்குப் பழியோ வேண்டாமே!

தீங்கை மறத்தல் உயர்வாகும்!

ஈன மனத்தோர் ஆட்டத்தைப்

பொறுமை யாலே வென்றிடலாம்!


வரம்பு மீறிய சொற்களையும்

பொறுப்போர் துறவிபோல் தூயவர்தான்!


மற்றவர் கொடிய சொற்களையும்

பொறுத்துக் கொள்ளும் மனிதருக்கு

விரதம் ஏற்கும் துறவிகளும்

அடுத்த நிலையில் இடம்பெறுவார்!

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home