Saturday, January 31, 2015

கடையேழு வள்ளல்கள்
பேகன்—பாரி—காரி-- ஆய் அண்டிரன்
அதியமான்--- நள்ளி-- ஓரி
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பேகன்
-----------------
கடுங்குளிரைத் தாங்காமல் காட்டில் மயிலோ
நடுங்கி அகவுதோ என்றே தவித்து
நொறுங்கிய பேகன் மயிலுக்குப் போர்வை
கொடுத்தான்! கொடைப்பண்பை வாழ்த்து.

பாரி
------------------
முல்லைக் கொடியோ கொழுகொம்பைத் தேடித்தான்
அல்லாடும் கோலத்தைப் பார்த்ததும் பாரிவள்ளல்
முல்லைக் கொடிபடரத்  தன்தேரைத் தந்துவிட்டான்!
வள்ளலின் கொடைமடத்தை வாழ்த்து.

காரி
-----------------
வலிமையான நல்ல குதிரைகள் மற்றும்
தெளிவாய் அறிவுரைகள் தந்து--அழியாப்
புகழ்பெற்றான் காரி கொடைமடத்தால் என்றும்!
அகங்குளிரப் போற்றுவோம் நாம்.
---------------------------------------------------------------------------------------------
ஆய் அண்டிரன்
-----------------------------------------
ஒளிமிக்க நீலமணியை, நாகம் அளித்த
கலிங்கமென்னும் ஆடையை, தேடிவந்த ஏழை
எளியவர்க்குத் தந்து மகிழ்ந்தவன் ஆய்தான்!
புவியில் நிலைத்தவனை வாழ்த்து.

அதியமான்
-------------------------
தன்னுடைய வாழ்நாளைக் கூட்டும் எனத்தெரிந்தும்
தன்னிடம் வந்துசேர்ந்த நெல்லிக் கனிதன்னை
வண்டமிழ் அவ்வையார் நீடுவாழத் தந்துவந்தான்!
மன்னன் அதியமானை வாழ்த்து.

நள்ளி
---------------------
இரவலரை வாட்டும் பசிப்பிணி நீங்க
பெரும்பொருள் தந்தே அவர்கள் உள்ளம்
பெருகும் மனநிறைவில் தான்மகிழ்ந்தான் நள்ளி!
அருந்தமிழால் வாழ்த்துவோம் நாம்.

ஓரி
----------
கூத்தாடி வாழும் கலைஞர்கள் ஆற்றலை
ஊக்குவிக்கும் எண்ணத்தில் நாடுபல தந்தவன்!
போற்றும் புகழ்நிலைக்கும் ஓரி, கொடைமடத்தின்
ஊற்றென்றே பாத்தமிழால் வாழ்த்து.

0 Comments:

Post a Comment

<< Home