Monday, December 16, 2024

மதுரையில்


மதுரையில் எங்கள் குடும்பம்!


முத்துசுப்பு தேவகி இணையருக்கு

பிள்ளைகளாய்

அக்காலம்  ஐந்தில் சிறுமியாய்க் கல்யாணி 

இத்தரணி விட்டே மறைந்தாளாம்!

நான்காக

பிள்ளைகள் வாழ்ந்தோம் வளர்ந்து.


மதுரைமில் பென்னர் நிறுவனத்தில் வேலை!

நடுத்தரமான வாழ்க்கை! எளிமையாய் வாழ்ந்தோம்!

படித்தோம் வளர்ந்தோம் படிப்படி யாக!

விரிந்தது ஆல்போல் படர்ந்து.


இலக்குமி பாபாராஜ் ராஜபாக்யம்

மற்றும்

கடைக்குட்டி யாக கஜராஜாய் நால்வர்

நடைபோட்டுப்  பக்குவ மாக வளர்ந்தோம்!

கடமைகள் செய்துவிட்டார் பெற்றோர் உவந்து.

பருவத்தில் இல்லறமே சான்று.



அந்தந்தக் காலம் விளையாட்டு என்றேதான்

சென்றன! கூடித்தான் பேசிக் கலந்தாலும்

ஒன்றாக வாழ்ந்தோம்! தனியறைகள் இல்லையன்று!

அங்கங்கே உட்கார்ந்து பேசிப் படித்திருந்தோம்!

ஒன்றாய் மகிழ்ந்திருந்த வாழ்வு.


தந்தையும் தாயும் உலகைவிட்டுச் சென்றனர்!

எங்கள் சிறகுகள் எங்களது வாழ்க்கையென்று

இன்று பயணங்கள் வெவ்வேறு திக்குகளில்!

பண்பட்டும் புண்பட்டும் வாழ்கிறோம் இன்றிங்கே!

அன்றாடம் எண்ணுவதே வாழ்வு.


மதுரை பாபாராஜ்


நானறிந்தது சகாயமாதா தெரு. இரு வீடு ஒரு வீடாய் அமைந்து, தேடி வருவோருக்கெல்லாம் அன்னமிட்டு மகிழ்ந்த வீடு. ஞாயிறு வந்தாலே கொண்டாட்டம் தான். நட்பு வட்டாரம் பெரிதாகக் கொண்ட அம்மான்களைப் பார்த்து தான் இன்று வரை எம்மைச் சுற்றிலும் நண்பர் கூட்டம். தேடி வரும் பிரச்சனைகளை அமைதியாக எதிர்கொண்டு வெற்றி பெறும் மனப்பாங்கு - பெரிய மாமா. தேனீ போல் சுறுசுறுப்பாய் இன்று வரை உலகம் சுற்றும் வாலிபனாய் வலம் வரும் - இளைய மாமா. வழிகாட்டிகளாய் .... உயர்கின்றோம் நாங்களும் அடியொற்றி ...

மகிழ்வு தரும் நினைவுகளே என்றென்றும். வருமோ அக்காலம் மீண்டும். சென்றிருந்தேன் அங்கேதான் (சகாய மாதா தெரு) சென்ற வாரம். நின்றிருந்தேன் சிறு நேரம் அங்கே தான். மாறவில்லை வாழ்ந்திருந்த வீட்டின் அடையாளம். அசை போட்டேன் அந்த இல்லத்தின் நினைவுகளை ...

அன்பான சுற்றம்தான் அவிழ்த்து விட்ட நெல்லி மூட்டையாய் சிதறி நிற்கிறது ஏற்றுக்கொண்ட பணிகளின் (பணத் தேவைகளின்) நிமித்தமாய். சந்திப்பதே அரிதாகிறது இக்காலத்தில். இணைப்பது இந்த செல்லிடப்பேசி தான். என்னே காலத்தின் கோலம்.


சரவணன் திண்டுக்கல்

0 Comments:

Post a Comment

<< Home