Wednesday, June 02, 2010

வாழ்வைக் கசக்காதே

==========================================
உறவுகளின் கூட்டணிப் பின்னல், குடும்பம்!
நிறைகளும் உண்டு!குறைகளும் உண்டு!
நிறைகளைத் தேக்கு!குறைகளை நீக்கு!
நிறைவுடன் வாழ்தலே வாழ்வு.

குறைகளைத் தேக்கி உறவைப் பகைத்து
விறைப்புடன் வாழ்ந்தால் நிம்மதி போகும்!
சிறகை இழந்த பறவையைப் போல
நடைதடு மாறும் உணர்.

கூட்டணிக் கட்சிகள் தேர்தலில் தங்களுக்குச்
சீட்டு கொடுத்தால்தான் அங்கே இருப்பார்கள்!
சீட்டு தரவில்லையா கூட்டணி மாறுவார்!
வேட்டுவைப்பார் கொள்கைக்குத் தான்.

வாழ்க்கையில் அப்படி வாழ முடியாது!
சூழ்நிலைகள் என்றுமே சீராய் இருக்காது!
சூழ்நிலைக் கேற்றவாறு பக்குவம் கொள்ளவேண்டும்!
தாழ்வு மனத்தை விலக்கு.

குழந்தைகள் சண்டையில் மூக்கை நுழைத்து
களமமைக்க முற்பட்டால் சச்சரவே மிஞ்சும்!
குழந்தை அடுத்த நொடிப்பொழுதில் ஒன்றாய்
விளையாடும் சண்டை மறந்து.

வம்பிழுத்த பிள்ளையும் பாதித்த பிள்ளையும்
ஒன்றாய் இணைந்து விளையாடும்! கைகொட்டி
நன்றாய் சிரிக்கும்! நம்முடைய மூக்குடையும்!
கண்டும்கா ணாமல் இரு.



கிடைக்கின்ற நேரத்தில் தந்தையும் தாயும்
இசைமீட்டும் இன்பமாய் மாறி ,குழந்தை
யுடன்சேர்ந்தே ஆடியும் பாடியும் வாழ்ந்தால்
விடைகொடுக்கும் ஏக்கந்தான் பார்.

தந்தையும் தாயும் குமுறிச் சினந்தேதான்
தங்களுக்குள் சண்டையிடும் கோலத்தைப் பார்த்திருந்தால்
பிஞ்சு மழலை அதிர்ச்சியில் வாழ்ந்திருக்கும்!
கெஞ்சும் விழிகளால் பார்த்து.

இத்தகைய ஏக்கம் குழந்தையின் நெஞ்சத்தில்
எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்றேதான்
பெற்றோர்கள் சிந்தித்து நாளும் செயல்பட்டால்
அற்புதந்தான் இல்லறம் இங்கு.

அச்சத்தில் வாழும் குழந்தைகள் உள்ளத்தில்
எப்பொழுதும் ஊன்றும் அழுத்தங்கள்! அந்நிலையில்
அக்குழந்தை ஏங்கும் அடுத்தவரைப் பார்த்துதான்!
அச்சமின்றி வாழப் பழக்கு.

எடுத்ததற் கெல்லாம் சினங்கொண்டு சீறி
மடுவை மலையாக்கி வாழ்வைக் கசக்கும்
கொடுமையோ இல்லறத்தில் நல்லதல்ல! தென்றல்
நடைபோட வாழப் பழகு.

0 Comments:

Post a Comment

<< Home