Wednesday, June 02, 2010

அனலானாள் ஆரணங்கு !

==============================
மண்விட்டு மண்சென்று பூவோ வளர்வதுபோல்
பெண்ணிங்கே இல்லறத்தை ஏற்றதும் பண்புடனே
தன்வீட்டை விட்டுப் புகுந்தவீடு செல்கின்றாள்!
கண்ணீரின் ராகம் பிரிவு.

வாழ்க்கை கிடைத்துவிட்ட இன்பத்தில் நாள்தோறும்
சூழ்நிலைப் போக்கைப் புரிந்து புகுந்தவீட்டில்
காலத்தை வெற்றிபெறும் கோலத்தில் தன்னைத்தான்
தாயமாய்த் தந்திடுவாள் சாற்று.

மாமனார்,மாமியார்,நாத்தனார், தன்கணவன்
தேனருவி வாண்டுகள் எல்லோர்க்கும் நல்லவளாய்
ஆனமட்டும் ஆவதற்கு நாட்டியம் ஆடுகின்றாள்!
பூமகள் பம்பரந் தான்.

இப்படிப் போனாலும் குற்றமென்பார்! அம்மங்கை
அப்படிப் போனாலும் குற்றமென்பார்! நாள்தோறும்
எப்படிப் போனாலும் குற்றமென்றால் என்செய்வாள்?
செப்புமகள் நின்றாள் தனித்து.

தனிமரமாய் நின்றவளை நோக்கிக் கணைகள்
அணியணியாய் வந்தாலும் தன்னை மணந்த
கணவனும் கண்டுக்கொள்ள முன்வர வில்லை!
அனலானாள் அங்கே நிமிர்ந்து.

0 Comments:

Post a Comment

<< Home