Wednesday, September 24, 2014

குழந்தை மனம் கொள்வோம்
----------------------------------------------------------
குழந்தைகள் கூடி விளையாடும் நேரம்
களமமைத்துப் போர்க்கோலம் கொண்டேதான் நிற்கும்!
குழந்தை உடனே பகைமறந்து மீண்டும்
விளையாடும் கூடிக் கலந்து.

 வேடதாரிக் கண்ணோட்டம்
----------------------------சாதனையை  வாழ்த்தி மகிழ்தலே பண்பாகும்!
சாதனையைச் செய்தவர் வேண்டியவர் என்றால்தான்
நாடதிர வாழ்த்திக் கொடிபிடிப்போம் என்றிருத்தல்
வேடதாரிக் கண்ணோட்டந் தான்.

தனிமை
----------------
அமைதி நிலையோ தனிமைக் கவிதை!
சுமையாய் இருந்தும் சுகமாய் இருக்கும்!
இமையாய் இருந்தும் இமைக்க மறுக்கும்!
சுமையே தனிமைத் துணை.

அலையும் கரையும்
--------------------------------------
கரையைத் தொடாமல் விடமாட்டேன் என்றே
அலைகள் பிடிவாதம் செய்ய---கரையோ
தொடவிட மாட்டேன் என்றேதான் நிற்க
அலைகரை மோதலைப் பார்.

ஆட்டுக்கல் மாவாக நாம்!
---------------------------------------------
நாட்டுக்கு நாடிங்கே வீட்டுக்கு வீடிங்கே
சேட்டைகள் செய்யும் குழந்தைகள் ஏராளம்!
ஆட்டுக்கல் மாவாய் அரைபட்டு நொந்தாலும்
சேட்டை குழந்தையின் சொத்து.

தமிழைத் தவிர்க்காதே
------------------------
மொழிகளைக் கற்பதில் தப்பில்லைஆனால்
மொழிகளைச் சொல்லித் தமிழை நாளும்
தவிக்கவிடும் போக்கைத் தமிழ்நாட்டில் செய்யும்
இழிகுணத்தை என்றும் தவிர்.

அன்றாட வாழ்க்கை
-----------------------------------------
கூட்டைவிட்டுக் காலைப் பொழுதிலே புள்ளினங்கள்
நாற்றிசை நோக்கிப் பறந்தே திரிந்துவிட்டுக்
கூட்டுக்குள் மாலைப் பொழுதில் திரும்புதல்போல்
நாட்டிலே மக்களின் வாழ்வு.

மதுவைத் தீண்டாதே!
-------------------------------------------
என்னென்ன சொன்னாலும் யாருமிங்கே கேட்பதில்லை!
சொன்னவரை இங்கே ஒதுக்கிவைத்துச் செல்கின்றார்!
நன்மைக்கே சொன்னாலும் நம்ப மறுக்கின்றார்!
என்று திருந்துவார்சொல்.





0 Comments:

Post a Comment

<< Home