Friday, July 27, 2018


இல்வாழ்க்கை ---5 குழந்தைப்பாடல்
-----------------------------------------------------------------------------------------
அறவழி சிறந்த வழி பெருமைக்கு உகந்த வழி

மனைவி யுடனே இணக்கமாக
வாழ்பவன் இங்கே சிறந்தவனாம்!

பிள்ளைகள் பெற்றோர் உறவினரைப்
பேணிக் காப்பதில் வல்லவனாம்!

நல்லறம் போற்றும் துறவிகளை
வறுமைப் பிணியில் துடிப்போரை

முன்னோர் மற்றும் விருந்தினரைக்
காப்பதே அவனுக்கு அறமாகும்!

நேர்மை யான வழியினிலே
சேர்த்த பொருளை உறவோடு

பகுத்தே உண்டு வாழ்பவனின்
வாழ்க்கை என்றும் சிறப்பாகும்!

உண்மை யான அன்புடனே
நல்லறம் போற்றி வாழவேண்டும்!

பிறவழி சென்று வாழ்பவனை
அறவழி வாழ்வோன் வென்றிடுவான்!

இல்லறந் தன்னில் துறவறத்தை
ஏற்பவன் வல்லமை நிமிர்ந்திடுமே!

பழிச்சொல் இன்றி இல்லறத்தை
ஏற்று வாழ்தல் சிறப்பாகும்!

இல்லற வாழ்வை மேற்கொண்டோன்
உயர்நிலை மாந்தராய்ப் புகழ்பெறுவான்!!

0 Comments:

Post a Comment

<< Home