Friday, July 27, 2018


நீத்தார் பெருமை --3
------------------------------------------------------------------------------------
புலன்களை அடக்கு புகழின் சிகரம் நிச்சயம்
----------------------------------------------------------------------------------
ஆசையை விட்டே ஒழுக்கமுடன்
வாழ்ந்தால் புகழும் நூல்கள்தான்!
இறந்தவர் எத்தனை பேர்களென்றே
எண்ணி முடித்தல் அரிதாகும்!
அதுபோல் துறந்தார் பெருமைகளை
அளவிடல் என்றும் அரிதாகும்!

இல்லறம் துறவறம் எடைபோட்டே
உலகப் பற்றைத் துறந்தோரின்
உண்மைத் துறவின்  பெருமைதான்
உலகில் உயர்ந்தது பார்!பார்!பார்!

வலிமை என்னும் அங்குசத்தால்
அய்ம்புலன் அடக்கும் தூயவனே
வீடு பேற்றின் விதையாவான்!
ஐம்புலன் ஆசையை அடக்கியவன்
ஆற்றலின் சாட்சி இந்திரன்தான்!

செய்ய முடியாப் பெருஞ்செயலைச்
செய்து முடிப்பவர் பெரியோராம்!
முடிக்கத் தவிப்போர் சிறியோராம்!
ஐம்புலன் ஆசையை வேரறுத்தால்
வையகம் வசப்படும் உணர்வாயே!

அறிவில் சிறந்தவர் என்பதையோ
பேசும் மணிமொழி காட்டிவிடும்!
பண்பில் சிறந்த சான்றோர்கள்
கோபம் தங்க அனுமதியார்!

அனைத்து உயிரும் சமமென்றே
இரக்கம் கொண்டு வாழ்பவர்கள்
உலகம் போற்றும் சான்றோராம்!
அன்புடன் வாழும் அந்தணராம்!


0 Comments:

Post a Comment

<< Home