Friday, July 27, 2018


திருக்குறள்
------------------------------
அன்புடைமை -- 8
-----------------------------------------------
வாழ்க்கையின் உயிர்நாடி அன்பே
-------------------------------------------------------
அன்பை அடைக்கும் தாழில்லை
உருகும் கண்ணீர் காட்டிவிடும்!

அன்பில் லாதோர் தமக்குரியர்!
தன்னலம் கொண்டே செயல்படுவார்!

அன்புடை யாரோ பிறர்க்குரியார்!
மற்றவர்க் காக செயல்படுவார்!

உயிரும் உடலும் இணைந்ததுபோல்
அன்பும் வாழ்க்கையும் இணைந்திருக்கும்!

அனைவரை நாடிப் பழகவைக்கும்!
நட்பை விழுதாய்ப் படரவைக்கும்!

அறநெறி காக்கும் அன்பிங்கே
வீரத் திற்குத் துணைபோகும்!

எலும்பே இல்லா உயிரினத்தை
வெய்யில் இங்கே துன்புறுத்தும்!
அன்பே இல்லா மாந்தரையோ
அறத்தின் கடவுள் துன்புறுத்தும்!
அன்பே இல்லா வாழ்க்கையோ
பாலை நிலத்தின் பட்டமரம்
துளிர்த்தது போன்ற நிலையாகும்!

உள்ளே உள்ள இதயத்தில்
அன்பே இல்லை என்றாலோ
வெளியே உள்ள உறுப்புகளால்
பயன்கள் என்ன  சொல்லுங்கள்?



0 Comments:

Post a Comment

<< Home