Friday, July 27, 2018


மக்கட்பேறு---7
-----------------------------------------------------------------------------------------------------
நல்லகுழந்தைகள் நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை
----------------------------------------------------------------------------------------------------
அறிவும் ஆற்றலும் இணைந்துள்ள
குழந்தைச் செல்வம் உயர்செல்வம்!
பண்பான குழந்தையைப் பெற்றவர்க்கோ
தலைமுறை ஏழிலும் துன்பமில்லை!

நெறிகளைப் போற்றி வாழ்ந்திருந்தால்
குழந்தைகள் நல்லவ ராகிடுவார்!

மழலைக் கைகள் பிசைந்திட்ட
எச்சிச் சோறு பெற்றோர்க்கு

அமுதை விஞ்சும் சுவைதானே!
அருமை அருமை அருமைதான்!

குழந்தை உடலைத் தீண்டுவது
தழுவிய மேனிக்கு இன்பந்தான்!

மழலையைக் கேட்டு மகிழாதோர்
குழலிசை யாழிசை இனிதென்பார்!

கற்றவர் அவையில் தன்மகனோ
நிற்கும் தகுதியைக் கல்வியாலே
தந்தை தருவது கடமைதான்!

தங்களைக் காட்டிலும் குழந்தைகள்
அறிவால் உயர்ந்தால் அகமகிழ்வார்!
சான்றோர் என்றே பிறர்சொன்னால்
பெற்ற பொழுதினும் தாய்மகிழ்வாள்!

இத்தகைய பிள்ளைகள் பெற்றெடுக்க
தந்தை செய்த தவமென்ன
என்றே உலகம் வியக்குமாறு
செய்வது பிள்ளைகள் கடனாகும்!

0 Comments:

Post a Comment

<< Home