Friday, November 08, 2019

திருக்குறள் குழந்தைப்பாடல்
-------------------------------------------------
தீவினை அச்சம்-21
----------------------------------------------------------
தீமை செய்ய பயப்படு
---------------------------------------------------------
தீயவர் தீமை செய்வதற்கோ
கொஞ்சம் கூட அஞ்சமாட்டார்!

கடுகளவு தீமை செய்வதற்கும்
சான்றோர் இங்கே பயப்படுவார்!

தீங்கு விளையும் என்றேதான்
தீமை செய்ய அஞ்சவேண்டும்!

நமக்குத் தீமை செய்தாலும்
நன்மை செய்தல் சான்றாண்மை!

துன்பம் செய்ய நினைத்தாலோ
அறத்தின் வலிமை  தண்டிக்கும்!

வறுமைப் பிணியில் துடித்தாலும்
கொடுஞ்செயல் நாடக் கூடாது!
நாடிச் செய்தால் ஏழ்மையோ
தேடி வந்தே நமைச்சூழும்!

துன்பம் தனக்கு வருவதையே
விரும்பா தவனோ மற்றவர்க்குத்
தீங்கைச் செய்தல் கூடாது!

எப்பகை வரினும் தப்பிக்கலாம்!
தீவினைப் பகையோ தொடர்ந்துவந்து
நம்மை அழிக்கும் சக்தியாகும்!

தன்நிழல் தொடரும் தன்மைபோல்
தீமை செய்யும் வஞ்சகரை
அழிவும் தொடர்ந்தே அழித்துவிடும்!

தன்மேல் அன்பைக் கொண்டவனோ
பிறர்க்குத் தீமை செய்வதில்லை!

இப்படித் தீமை செய்யாதோன்
வாழ்வில் கேடில் லாதவனாம்!

மதுரை பாபாராஜ்



0 Comments:

Post a Comment

<< Home