Saturday, December 07, 2019

மகள் சுபாவின்  பள்ளித் தோழிகளின் சந்திப்பு!

வருங்காலப் பாட்டிகளின் லூட்டி!

07.12.19

பள்ளிப் பருவத்தில்  வாழ்ந்த கலகலப்பை
எல்லோரும் இங்கே பகிர்ந்திட்டார்  அன்புடனே!
இத்தனை ஆண்டுகளாய் வாழ்ந்த அனுபவத்தின்
முத்திரையை இங்கே பதித்தார்கள் நட்புடனே!
அக்கறையாய்க் கேட்டார் ரசித்து.

வருங்காலப் பாட்டிகளின் லூட்டியைப் பார்த்தோம்!
அரும்புக் குழந்தைகளாய் மாறிவிட்டார்!  ஆகா
அருவியின் ஓசை கலகலப்பை விஞ்சும்
அருமையான சங்கமம் தான்.

எல்லோரும் உட்கார்ந்து பேசி மகிழ்ந்தார்கள்!
சொல்லாட்டம் ஆடி சிரித்துக் களித்தார்கள்!
கொல்லென்று சேர்ந்து சிரித்தே மெய்மறந்தார்!
உள்ளங்கள் சேர்ந்ததே நட்பு.

எப்படிப் பார்த்த குழந்தைகள் எப்படி
இப்படி வாழ்வில் வளர்ந்தார்கள் என்றேதான்
கண்டு வியந்தோம்!  குடும்பத் தாருடன்
வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

வெவ்வேறு திக்கிலே வெவ்வேறு வாழ்க்கையில்
எவ்வாறோ சென்றாலும் இன்றும் தொடர்புடனே
எல்லோரும் இங்கே இருப்பதே சாதனைதான்!
பல்லாண்டு வாழ்க தொடர்ந்து.

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home