Friday, March 20, 2020

குறள்திலகம் திரு.அன்வர் பாட்சா தமிழ்போல் வாழ்க!

கோவைக் குறள்திலகம் அன்வரின் எண்ணமும்
நாவசைவும் என்றும் குறளை எதிரொலிக்கும்!
பூவின் மணம்போல் குறள்மணக்கும் அன்வரிடம்!
ஏழுசீர் நாயகனை வாழ்த்து.

ஆறு மொழிகள் அறிந்தவர்!பற்பல
ஏடுகற்றே பட்டங்கள் பெற்று மொழியாசான்
பாடுபட்டே நற்பணி யாற்றி பணிநிறைவில்
தூதுவ ரானார் குறளுக்கே! நாள்தோறும்
கூறுகின்றார் தேன்குறளை! வாழ்த்து.

நூல்கள் பலபடைத்துச் சாதனை செய்தவர்!
ஆலம் விழுதுகள்போல் பட்டம் விருதுகள்
ஞாலத்தில் பெற்றே வாழ்கின்றார்! வாழ்த்துவோம்!
மேலும் விருதுபெற வாழ்த்து.

உள்நாடு் மற்றும் வெளிநாடு வாய்ப்புகளைச்
செவ்வனே ஏற்றுக் குறள்தொண்டு செய்கின்றார்!
நம்மரசின் வள்ளுவர் நல்விருது பெற்றவர்!
வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

குறள் 67/70

பெற்றோர் கடமையைச் செய்தார்கள்! பிள்ளையோ
பெற்றோர்க்கு நற்பெயர் ஈட்டிக் கொடுத்துவிட்டார்!
நற்றமிழ்  அன்வரும் அன்னார் குடும்பமும்
வெற்றியுடன் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்






0 Comments:

Post a Comment

<< Home