Monday, April 27, 2020

மாசின்றி வாழப் பழகு!

ஏட்டுச் சுரைக்காய் உதவாது!

அழகான வானவில் நிழலோ தெளிவாய்க்
களங்கமற்ற நீரில் தெரிந்தே இணைந்து
வளையமாய் மாறியதை ஊடகத்தில் கண்டேன்!
அரைவட்ட வானவில் இங்கே முழுவட்ட
நிலையில் தெரிந்தது! மாசற்ற பேரழகு!
களங்கமெல்லாம் மாசால்தான் இங்கு.

மாசற்ற சூழ்நிலை நாட்டில் தெரிகிறது!
மாசகன்று மண்ணகமும் விண்ணகமும்
நீரகமும்
ஆகச் சிறந்த தெளிவாக உள்ளது!
யாரிதற்கு காரணம் சொல்?

வண்டிப் புகையும் தொழிற்சாலை மாசுகளும்
மண்டியதால் ஆறுகளில் வானத்தில் காற்றிலென்று
எங்கெங்கும் நீக்கமற மாசு பரவியது!
என்றும் நிரந்தரமாய் நீக்கு.

மாசு படிந்து வெளியேறும் தண்ணீரை
கூசாமல் மீண்டும் மறுசுழற்சி செய்யவேண்டும்!
ஆறுகள் வாய்க்காலில் சென்று கலக்காமல்
ஆலை இயங்கவேண்டும் இங்குதான்! மக்களும்
வாய்க்கால் அடைக்குமாறு குப்பைக் கழிவுகளை
தூக்கி எறிதல் அழிவு.

மாசற்ற சூழ்நிலைக்கு மக்களும் ஒத்துழைப்போம்!
மாசுகளைக் கட்டுப் படுத்துகின்ற சட்டத்தை
நாட்டில் கடுமையாக்கி  நாளும்
அமல்படுத்து!
நாட்டையும் மக்களையும் வாழவைத்துக் காப்பாற்று!
ஏட்டுச் சுரைக்காயை மாற்று.

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home