Sunday, September 27, 2020

வசையும் நிற்கும் இசையும் நிற்கும்

 ஏற்பாடு

ரோஜாமுத்தையா நூலகம்-- களம் அமைப்பு


பாலாவின் சங்கச்சுரங்கம்


இணையப்பத்து-- இரண்டாம் பத்து


ஏழாம் உரை-- 26.09.20


தலைப்பு

வசையும் நிற்கும் இசையும் நிற்கும்


புறப்பாடல் ஏந்தும் வரியெடுத்தார்  பாலா

சிறப்புடன் பேசி வழக்கம்போல் இங்கே

மகத்தான சங்கச் சுரங்கத்தில் கேட்டோம்!

அகம்மகிழ்ந்து வாழ்த்துகிறோம் நாம்.


ரோஜாமுத்தையா நூலக இயக்குநர் திரு.சுந்தர்:


காந்தக் குரலுடன் சுந்தர் தொடங்கிவைத்தார்!

பாலா நிகழ்வை மகிழ்ந்து.


இசையும் நிற்கும்:


SPB

பின்னணிப் பாடகர் பாலு நினைவலைகள்

எண்ணத்தைத் தூண்ட வணங்கிப் புகழ்ந்தேதான்

தன்னுரையைக் காணிக்கை யாக்கித் தொடங்கினார்!

என்றும் இசைநிற்கும்  என்று.


வேள்பாரி


பறம்புமலைப் பாரி கடையேழு வள்ளல்

சிறப்பில் தனித்துவம் பெற்றவன் என்றார்!

உழவற்ற குன்றம் தலைதாழாக் குன்றம்!

சுழன்றுவரும் வெம்பகையே! இங்கே விளையும்

பலாக்கனிகள் நெல்லும் கிழங்குடன் தேனும்

உழாமலே உள்ளன காலமெலாம்  வாழ்வார்!

இரவலராய்ச் சென்றால் பறம்புநாட்டைப் பாரி

வழங்குவான் போங்க ளென்றே புலவர்

உரைத்தார் சிறப்புகளைத் தான்.


அணையும்  அணையாப் புகழும்!


கரிகாலன்


கரிகாலன் கட்டிய கல்லணை இன்றும்

தொழில்நுட்ப ஆற்றல் வியக்குமாறு நிற்கும்

எழுச்சிக் கிணையில்லை நீருள்ள மட்டும்

அழியாது கரிகாலன் பேர்.


காளிங்கராயன் கால்வாய்


கால்வாயைச் சுற்றி வளைத்தே மலையிலே

நீரோட்டம் தங்குதடை இல்லாமல் செல்வதற்கு

பாம்புபோல் அங்கே வளையவைத்துக் கட்டியதை

நேரில் படம்பிடித்த பேச்சு.


பென்னிகுயிக்

தினமணியில் திரு. உதயச்சந்திரன்


முல்லைப் பெரியாறில் பொங்கிவந்த தண்ணீரை

வல்லமை கொண்டே தேக்கிய ஆங்கிலேயர்!

எள்ளளவும் தன்னலமின்றி தன்சொத்தை விற்றேதான்

முல்லை அணைகட்டி நீர்த்தேக்கி அப்பகுதி

எல்லாம் உணவு வளங்காண வைத்தவர்!

தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.


தேனிப் பகுதிமக்கள் நன்றி மறவாமல்

நேயமிகு பென்னி குயிக்கின் நினைவாக

ஆர்வமுடன் இன்றளவும் பொங்கல் படையலிட்டுச் 

சீலமுடன் நன்றி விழாவாகக் கொண்டாடும்

கோலமுண்டு  உண்மை இது.


மாசாணியம்மன் கோயில்


பொள்ளாச்சி ஆனைமலை தன்னில் இருக்கின்ற

எல்லைக்குள் உள்ள திருக்கோயில் பற்றியுள்ள

பல்வேறு பக்தி வரலாற்றைச் சொல்லி

விளக்கினார்!

இவ்வழக்கில் நன்னனின் பின்னணியும் உண்டென்றார்!

நன்னனில் நல்லவரும் கெட்டவரும் உண்டென்றார்!


வசையும் நிற்கும்


இட்லர்/ நீரோ


வரலாற்றில் இட்லரின் ஆட்சி கொடுங்கோல்

அரசாட்சி என்றும், முடிவில் போரின்

கரங்களால் தற்கொலை செய்த நிலையை

உரையில் விளக்கினார் இங்கு.


ரோம்நகர் தீப்பற்றி தீய்ந்தபோது நீரோவோ

கானக் கருவி பிடில்மீட்டி வாழ்ந்திருந்தான்!

ஈனத் தனத்தைப் பழமொழியாய் மக்களின்றும்

நாட்டிலே கூறுவதைச் சொன்னார் நினைத்தேதான்!

ஆற்றலான பேச்சுக்கு வாழ்த்து.


எழுத்தாளர் திரு.இராமகிருஷ்ணன்

கருத்துரை:


பாலாவின் சங்கச் சுரங்கத்தில் பங்கேற்று

சாரமுடன் தன்கருத்தைக் கூறியே வாழ்த்தினார்!

பார்புகழும் நண்பரின் வாழ்த்தோ உரம்சேர்க்கும்!

வாழ்க வளமுடன் இங்கு.


வக்கிர எண்ணம் எதிர்மறைச் சிந்தனையாம்!

மக்கள் வசைமாரி தந்தேதான் நிந்திப்பார்!

அத்தகைய வாழ்வின் வசைநிற்கும் 

இவ்வுலகில்!

சுற்றம் பழிக்கும் இழிவு.


தனிமனித நல்லொழுக்கம் தங்கித் தழைக்க

மனிதன் மனிதனாக வாழ்ந்திருந்தால் மக்கள்

அணியணியாய் வாழ்த்தும் இசைநிற்கும்

பாரில்!

இணையற்ற இப்புகழே வாழ்வு.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home