Sunday, November 29, 2020

5 இல்வாழ்க்கை

குறளுக்குக் குறள்வடிவில் விளக்கம்.

5. இல்வாழ்க்கை

குறள் 41:

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணையென்றார் வள்ளுவர்!

இல்லாள்  குழந்தைகள் பெற்றோர் இவர்களுக்கு

இல்லறத் தானே துணை.

குறள் 42:

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணையென்றார் அய்யன்!

துறவி , வறியோர்கள், ஆதர வற்றோர்க்(கு)

அறத்துணை இல்லறத்தான் தான்.

குறள் 43:

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தா றோம்பல் தலையென்றார் வள்ளுவர்!

வாழ்ந்தவர்கள், வாழ்வோர், விருந்தோம்பல், சுற்றத்தார்

பேணுதல் இல்லறத்தான் பண்பு.

குறள் 44:

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை

வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இலயென்றார் அய்யன்!

பழியின்றி சேர்த்த பொருளைப் பகுத்துக்

களித்துண்ணும் வாழ்வே உயர்வு.

குறள் 45:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அதுவென்றார் வள்ளுவர்!

அன்பும் அறமுமிங்கே இல்வாழ்வின்

நற்பயனும்

பண்பென்று மாகும் உணர்.

குறள் 46:

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்

போஒய்ப் பெறுவ தெவனென்றார் அய்யன்.

அறநெறி இல்வாழ்வின் நற்பயனை வேறு

நெறிகளேற்றால்   காண்போமா? கூறு.

குறள் 47:

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லாம் தலையென்றார் அய்யன்!

இயல்பாக இல்வாழ்க்கை வாழ்வோன் மற்ற

முயற்சி உடையோர்முன் ஏறு.

குறள் 48:

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்தென்றார் வள்ளுவர்!

போற்றும் அறவழியில் மற்றவரை வாழவைப்போர்

பற்றற்றோர் நோன்பைவிட மேல்.

குறள் 49:

அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

பிறன்பழிப்ப தில்லாயின் நன்றென்றார் அய்யன்,!

பழியற்ற இல்வாழ்க்கை வாழ்தல் அறமாம்!

அழியாப் புகழ்தரும் வாழ்வு.

குறள் 50:

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படுமென்றார் வள்ளுவர்!

இல்லறத்தில் நல.லறத்தைப் போற்றியே வாழ்பவன்

தெய்வப் பிறவிதான் இங்கு.

மதுரை பாபாராஜ்



0 Comments:

Post a Comment

<< Home