Saturday, May 06, 2023

பெங்களூரு பயணம்



 பெங்களூரு பயணம்!

அனைவருக்கும் நன்றி!

30.04.23 --- 03/04.05.23

உடன்வந்த குடும்பத்தார்:

மனைவி வசந்தா--மருமகள் சத்யபாமா

பேரன்கள்: நிக்கில் அபிசேக் -- 

வருண் ஆதித்யா

ஓட்டுநர்: திரு சீனிவாசன்


விருந்தோம்பல் அளித்தவர்கள்:

தங்கை ராஜி--

ரம்யா-- நாராயணன்-- திவ்யஸ்ரீ

ஆர்த்தி-- கோவிந்-- 

தியான் சஸ்திக்--மிருதுள்


30.04.23


காலைப் பொழுதில் மகிழுந்தில் பெங்களூரு

நோக்கிப் பயணம் புறப்பட்டோம் நாங்கள்தான்!

போகும் வழியில் மரத்தடியில் கட்டுசாதம்

ஆகாகா ! உண்டு ருசித்தோம் சுவையுடனே!

ஆசையுடன் வந்துவிட்டோம் ஊர்.


30.04.23


தங்கை, கோவிந்தன் ஆர்த்தி இணையரின் இல்லம்!


இட்லியுடன் கட்டுசாதம் எல்லோரும் சாப்பிட்டோம்!

பற்றுடன் அங்கே விருந்தோம்பல் தென்றலை

தங்கை , மகனும் மருமகளும் வீசினர்!

அன்பு மகன்களோ சுற்றியே வந்தனர்!

உள்ளம் ரசித்தது கண்டு.


தியானின் தனித்துவம்!


சாய்பாபா தாத்தா என்றேதான் தேன்மழலை

பாய்ந்துவந்தே என்னை அழைத்திருந்த இன்பத்தில்

நானும் மெய்மறந்தேன்!

பேரன் தியான்வாழ்க! 

பார்போற்ற வாழ்க வளர்ந்து.


நாராயணன் ரம்யா இல்லம்!


இரவிலே தங்கினோம்! மெய்மறந்து பேசி

சிரித்தோம்! குழந்தைகள் ஓடிவிளை யாடிக்

களித்திருந்தார்! கண்டு் ரசித்திருந்தோம்  அங்கு!

தழைத்தது நல்லுறவு தான்.


01.05.23/மைசூரு


குளம்பி அருந்தினோம்! காலை உணவாய்ச்

சுவையான  இட்லியும் சட்னியும் உண்டோம்!

மலைத்தோம் விருந்தோம்பல் கண்டு.


இரண்டு மகிழுந்தில் மைசூரை நோக்கி

நலமுடன் சென்றோம்! கடந்தஊர் பார்த்து!

முதலிலே ஸ்ரீரங்கப் பட்டினத்தைக் கண்டோம்!

உயர்ந்திருந்த கோபுரம் வானத்தைப் பார்த்தே

அழகாய் இருந்தது! பக்தர்கள் பக்தி

மழைபெய்தே நின்றார் மறந்து.

திப்பு சுல்தான் அருங்காட்சியகம்!

திப்பு பயன்படுத்தி போரிட்ட ஆயுதங்கள்

அப்படியே காட்சிப் படுத்தித்தான் வைத்திருந்தார்!

பச்சைப் பசேலென்ற புல்வெளியைப் பார்த்திருந்தோம்!

திப்புவின் வீரத்தை வாழ்த்து.

அங்கிருந்து மைசூர் அரண்மனை பார்ப்பதற்குச்

சென்றோம்! வழியில் மதிய உணவுகளை

கண்ணுங் கருத்துமாய் சாப்பிட்டோம்! நாங்கள்தான்!

அன்பு மிளிரும் உணவு.

மகள் ரம்யாவின் ஆற்றல்!

விடியல் பொழுதில் உறக்கம் கலைத்து

துடிப்புடன் தேங்காய் எலுமிச்சை சாதம்

தயிர்சாதம் வத்தல் வடகத் துவையல்

இனிமைச் சுவையுடன் மாம்பழம்  என்றே

அனைத்தையும் ரம்யா உழைப்புடன் ஆற்றல்

துணையுடன் இந்த வகைகளைச்

செய்தார்!

தனியாளாய்ச் செய்திட்டார்! சாதனையை வாழ்த்து!

மனங்குளிர வாழ்க மகிழ்ந்து.


இரவில் உணவகந் தன்னில் உணவை

அருந்தினோம் அங்கே மகிழ்ந்து.


02.05.23 வருணும் திவ்யாவும்!

விளையாட்டுக் கூடத்தில் டிராம்ப்போலைன் ஆடி

மலைப்புடன் துப்பாக்கி ஏந்தியே சுட்டார்!

சுவரேற்றம் ஏற முயற்சிகள் செய்தார்!

உவகையில் ஆடினர் அங்கு.


காலை உணவாக பூரியுடன் பொங்கலும்

ஆவலாய் உண்ண உருளைக் கிழங்கும்

நாவசைக்கும் சட்னியும் தந்தார் ரசித்துண்டோம்!

காலை அருமை உணவு.


மதியம் ஆர்த்தி வீட்டில்!

சாதமுடன் ஆகா சுவையான சாம்பாரும்

காளிபிளவர் கோசும் ரசமுடன் தயிர்தந்தார்!

ஆர்த்தியின் வீட்டில் அருணா சமையலோ

நேர்த்திதான்! உண்டோம் மகிழ்ந்து.


விஸ்வேஸ்வரையா அறிவியல் கூடம்

நிக்கில் வருண் ஓட்டுநருடன்!


உலக அறிவியல் முன்னேற்றம் கண்டோம்

மலைத்தோம்! பெயரன்கள் அங்கங்கே கண்டு

களித்தார் ஆர்வமுடன் தான்.


மகள் சுபாவின் நட்புத் தோழி வள்ளியின்  வீடு!

வள்ளியின் வீட்டு விருந்தோம்பல்

அன்பிலே

உள்ளம் மகிழத்தான் பேசி சிரித்திருந்தோம்!

வள்ளி மகளும் கணவரும் தந்தையும்

உள்ளம் திறந்து பேசினர் எங்களுடன்!

தெள்ளுதமிழ் போல்வாழ்க இங்கு.


            LIDO MALL ல் 

பொன்னியின் செல்வன் 2

பொன்னியின் செல்வன் இரண்டைப் பார்த்துவந்தோம்

எல்லோரும் சேர்ந்தே ரசித்து.


03.05.23 ஆர்த்தி கோவிந் வீடு!

காலை உணவாக இட்லியும் சட்னியும்

ஆர்வமுடன் தந்தார் சுவைத்தோம்! பின்னரோ

நண்பகலில் தந்தார் குருமா, உருளைக் கிழங்குடன்

அன்பாக பீன்ஸ் பொரியல் ரசமும் தயிருந்தான்!

அன்பிலே மெய்மறந்தோம் நாம்.


மைத்துனர் ஜோதிக்குமார் நினைவிடம்!

தேடிவந்து பேசி மகிழ்பவர் தன்வாழ்வில்

ஓடி உழைத்துக் கடமைகளைச் செவ்வனே

ஈடற்ற வண்ணம் முடித்துவிட்டார் சென்றுவிட்டார்!

வாட்டுகின்ற ஏக்கமுடன் அந்த நினைவிடத்தைப்

பார்த்து வணங்கினோம் நின்று.


03.05.23/04.05.23

பெங்களூர் விட்டேதான் சென்னை நகர்நோக்கி

தங்குதடை இன்றிப் புறப்பட்டோம் நாங்கள்தான்!

வந்தடைந்தோம் சென்னை! மறுநாள் அதிகாலை!

எங்கள் நினைவில் உறவின் பிரிவுதான்!

அம்மம்மா ஏங்குகின்றோம் இங்கு.


ஓட்டுநர் திரு சீனிவாசன்!

கோபப் படாமல் நிதானமாக வண்டியை

நாசூக்காய் ஓட்டினார்! அன்பான புன்னகை 

வேடமின்றி தங்கித் தவழும் முகத்தில்!

ஈடற்ற நண்பரை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்





0 Comments:

Post a Comment

<< Home