Wednesday, March 25, 2026

புறம் கூறாமை---19

 --------------------------------------------------------

புறம் கூறாமை---19

----------------------------------------------------------

அறஞ்செய் யாமல் வாழ்ந்தாலும்

புறங்கூ றாமைச் சிறப்பாகும்!

பார்த்தால் புகழ்ந்து பேசுவதும்

இல்லையேல் இகழ்ந்து பேசுவதும்

அறத்தைப் பழித்து வாழ்வதினும்

மடமை யான தீச்செயலாம்!

வேடம் போடும் நட்பைவிட

சாவது என்றும் மேலாகும்!

நேரில் இகழ்ந்தால் வீரன்தான்!

புறங்கூறி வாழ்ந்தால் கோழைதான்!

புறணி பேசும் குணமொன்றே

அறவழி மறந்ததைக் கூறும்பார்!

ஒருவரைச் சாடும் உன்னைத்தான்

மற்றவர் இங்கே தூற்றிடுவார்!

இனிமைப் பேச்சால் ஒற்றுமையை

வளர்த்து வாழத் தெரியாதோர்

புறணி பேசி உறவினரின்

கூட்டைப் பிரித்தே எறிந்திடுவார்!

நண்பனைப் பற்றி பழிப்பவர்கள்

அயலார் குறையைப் போற்றுவாரோ?

புறணி பேசுவோர் மேனியையும்

உலகம் இங்கே தாங்குவது

அறத்தை எண்ணும் குணத்தாலோ?

தங்கள் குறையைத் திருத்திவிட்டால்

புறணி பேசுதல் மறைந்துவிடும்!

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home