Saturday, September 20, 2008

வக்கிரங்கள் வென்றதில்லை

வெண்பனித் தோட்டமாம் காஷ்மீர் , குருதியிலே
செந்நிறமாய் மாறிநிற்கும் கோலத்தைக் --கண்டேதான்
கண்கள் குளமாகப் பார்த்திருக்கும் ஏக்கத்தில்
நொந்து துவள்கின்றோம்! சொல்.

அகமதாபாத் மாநகரைக் குண்டுகளால் தாக்கி
அகங்கள் ரணமாக இங்கே --பதறிக்
கதறியழும் காட்சியைப் பார்த்தே துடித்து
நடுங்கி நிலைகுலைந்தோம் பார்.

பெங்களூரு மாநகரைப் பாதகர்கள் குண்டுவைத்துத்
தங்களது வக்கிரத்தைக் கட்டவிழ்த்தார் --என்ன
கொடுமையோ இக்கொடுமை என்றே பதறி
ஒடுங்கி உருக்குலைந்தோம் பார்.

அன்றாடம் மக்கள் நடமாடும் டில்லியில்
அங்காடி வீதிகளில் அங்கங்கே -- குண்டுகளை
வைத்தார் ! குருதியாறு ஓடிய காட்சியிலே
அச்சத்தால் தேம்பிநின்றோம் !பார்.

பெற்றெடுத்த தாயைக் கதறியழ வைப்பவனை
உற்றமகன் என்றா உரைத்திடுவார்?-- பெற்றெடுத்த
இந்திய நாட்டைச் சிதைப்போரை இந்தியத்தாய்
இந்தியன் என்பாளோ ? கூறு.

அப்பாவி மக்களை அன்றாடம் கொல்கின்ற
இச்செயலோ கோழைத் தனந்தான் -- எப்படியும்
தண்டனை உண்டு உறுதியாக !வக்கிரங்கள்
வென்றதில்லை! உண்மை!திருந்து.

0 Comments:

Post a Comment

<< Home