Thursday, November 02, 2017

புகைபிடித்தல் உயிர் குடிக்கும்
பகை எழுத்தால் தமிழ் ஒடியும்!

புகைக்கும் பழக்கமோ மேனியின் உள்ளே
பகைவடிவில் ஊடுருவி உள்ளுறுப்பைத் தாக்கிப்
படைபடையாய் நோய்களை ஏற்படுத்திக் கொல்லும்!
உடனே நிறுத்தினால் நன்று.

புகைச்சாம்பல் போல மனிதாநீ நாளை
புகைந்தேதான் போவாய்! புதைந்தேதான் போவாய்!
தகனமேடை தன்னில் ஒருபிடிச் சாம்பல்!
உடனடியாய் விட்டுவிடு  நீ.

புகையோ உயிரைக் குடிக்கும்!  தமிழே
பகையெழுத்தால் எங்கள் உயிரான  நீயோ
சடக்கென்றே இங்கே ஒடிந்திடுவாய்! உந்தன்
தடம்காக்க முன்னெழுவோம் வந்து.

வடமொழியை ஆங்கிலத்தை கூட்டிக் குழைத்து
நடைமுறையில் செந்தமிழ்ச் சொற்களுடன் தூவி
இதையே தமிழென்றே சொல்லும் இழிவை
விதைக்கின்றார் தாயே! எழு.

புகைத்தல் மக்கள் உயிரைக் குடிக்கும்!
பகைச்சொல் அருமைத் தமிழை ஒடிக்கும்!
நடைமுறை யானால் இனமே அழியும்!
பகைச்சொல்லைப் பந்தாடு நீ.

மதுரை பாபாராஜ்  30.10.2017

0 Comments:

Post a Comment

<< Home