Thursday, February 28, 2019

விருத்தோம்பல்!

குறள் 41 ( குறள் எண் 90)

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

அம்மா அம்மா என்னம்மா
குறளுக்குப் பொருளென்ன கூறம்மா!

விருந்துக்கும் பூவுக்கும் உறவென்ன
விளக்க மாகக் கூறம்மா!

தமிழே! அமுதே! கண்ணம்மா!
அருகில் வந்தே கேளம்மா!

நம்மைத் தேடி வருகின்ற
விருந்தின ரையோ முகம்மலர

வருக என்றே வரவேற்றால்
வருவோர் மகிழ்ச்சியில் திளைத்திடுவார்

ஏனோ தானோ என்றேதான்
விருந்தின ரைத்தான் வரவேற்றால்

முகர்ந்து பார்த்தால் வாடிவிடும்
அனிச்சம் பூபோல் விருந்தினரின்

முகமும் இங்கே வாடிவிடும்!
விரைந்து  வெறுத்தே சென்றிடுவார்!

இதுதான் குறளின் பொருளம்மா!
வீட்டுக்கு விருந்தினர் வந்துவிட்டால்

மகிழ்ச்சி யுடனே வரவேற்கும்
மாண்பை நீயும் கற்றுக்கொள்!

நன்றி நன்றி என்னம்மா!
நன்கு விளக்கம் தந்துவிட்டாய்!

0 Comments:

Post a Comment

<< Home