Wednesday, October 30, 2019

திருக்குறள் குழந்தைப்பாடல
------------------------------------------------------
ஒழுக்கம் உடைமை-- 14
--------------------------------------------------------------------
தனிமனித ஒழுக்கம் தலை நிமிர வைக்கும்!
--------------------------------------------------------------------
ஒழுக்கம் உயர்வின் வழியாகும்!
உயிருக்கும் மேலாய்க் காப்போமே!

தடைகள் எத்தனை வந்தாலும்
தலைநிமிர்ந் தேதான் காப்போமே!

ஒழுக்கம் உடையவன் உயர்ந்தவனாம்!
இல்லா தவனே தாழ்ந்தவனாம்!

வேதம் சொல்வோன் கற்றதையே
மறந்து போனால் படித்திடலாம்!
ஒழுக்கந் தவறிப் போனாலோ
இழிந்த குலத்தான் எனச்சொல்வார்!

பொறாமை கொண்ட மனிதனிடம்
செல்வம் என்றும் நிலைக்காது!

ஒழுக்கம் இல்லா மாந்தரிடம்
உயர்வு என்றும் நிலைக்காது!

ஒழுக்கம் என்னும் விளக்கணைந்தால்
வாழ்வில் இருள்தான் சூழுமென்றே
ஒழுக்கந் தன்னைப் போற்றிடுவார்!

ஒழுக்கப் பண்போ இன்பந்தான்!
தவறிய ஒழுக்கம் துன்பந்தான்!

ஒழுக்கம் பேணும் சான்றோர்கள்
தீய சொற்கள் பேசமாட்டார்!

மக்களுடன் ஒத்து வாழாதோர்
கற்றுத் தெளிந்தவர் என்றாலும்
அறிவிலி என்றே பரிகசிப்பார்!

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home