Thursday, November 14, 2019

திருக்குறள் குழந்தைப்பாடல்!
----------------------------------------------------
புகழ்-- 24
----------------------------------------------------------
நல்லதைச் செய்தால் நற்புகழ் கிடைக்கும்
-------------------------------------------------------------------
ஈகைக் குணத்தால் வரும்புகழே
உலக வாழ்வின் நற்பயனாம்!

ஏழை எளியோர் வாழ்வதற்குக்
கொடுக்கும் பண்பு தரும்புகழை
உயர்ந்தோர் பேசுவார் பெருமையுடன்!
அந்தப் புகழே நிலையாகும்!

எவ்வுலகம் என்றாலும் அறிஞரைப்  போற்றாமல்
கொடுப்போ ரைத்தான் என்றும்  புகழ்ந்திருக்கும்!

கொடுத்துச் சிவந்தோர் செல்வங்கள்
குறையக் குறையப் புகழ்வளரும்!
உலகை விட்டே மறைந்தாலும்
நிலைக்கும் அப்புகழ் சான்றோர்க்கு!

ஈகைப் புகழே அடையாளம்!
புவியே வணங்கி மதித்திடுமே!

ஈகை மனமே இல்லாமல்
காட்சிப் பொருளாய் வாழ்வதற்குத்
தோன்றா மல்தான் இருந்திடலாம்!

புகழைச் சேர்க்கத் தெரியாதோர்
தங்கள் குறையை அறியாமல்
தம்மை இகழும் மற்றவரை
நொந்து கொள்வதால் என்னபயன்?

இறந்தபின் நிலைப்பது இப்புகழ்தான்!
புகழில் லாத மனிதரையோ
தாங்கும் நிலமோ தரிசாகும்!

பழியே இன்றிப் புகழுடனே
வாழ்பவர் உயிருடன் வாழ்பவராம்!
பழியைச் சுமந்து வாழ்பவனோ
பாரில் என்றும் நடைப்பிணந்தான்!

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home