Wednesday, November 13, 2019

திருக்குறள் குழந்தைப்பாடல்
---------------------------------------------------
ஈகை-23
----------------------------------------------------------
ஏழைகளுக்கு உதவு
--------------------------------------------------------------

ஏழைக்கு ஈவதே ஈகையாகும்!
ஏனை யோர்க்குத் தருவதெல்லாம்
சுயநல விளம்பரச் செயலாகும்!

நன்மை தன்னை எதிர்பார்த்து
பிறரிடம் பொருளை வாங்குவதோ
சரியே இல்லை! சொர்க்கமே
கிடைக்கா தெனினும் கொடுக்கவேண்டும்!

தனக்கு வறுமை இருந்தாலும்
ஏழைக் குதவுதல் நற்பண்பாம்!

கேட்டோர் பெற்று மனமகிழ்ந்தே
இனிய முகத்தைக் காட்டுமட்டும்
ஈகையும் துன்பம் தருவதுதான்!

பசியைப் பொறுக்கும் துறவிகளின்
ஆற்றல்  இங்கே வலிமைதான்!
பசிப்பிணி போக்கும் நல்லவர்கள்
குணமோ அதனினும் வலிமைதான்!

பகிர்ந்தே உண்ணும் மாந்தரையோ
பசிப்பிணி இன்னல் தாக்காது!

செல்வத்தை இங்கே கொடுக்காமல்
இழக்கும் கல்மனக் கொடியவர்கள்
ஈந்து மகிழ்வதை அறிவதில்லை!

பொருளை என்றும் ஈயாமல்
தன்னலம் கொண்டோன் நிலையிங்கே
யாசிப் பதைவிட இழிவாகும்!

சாவு நமக்குத் துன்பந்தான்!
ஏழைக் குதவா நிலையுடனே
வாழ்வதைக் காட்டிலும் அதுமேலாம்!

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home