Saturday, November 09, 2019

திருக்குறள் குழந்தைப்பாடல்!
---------------------------------------------------
ஒப்புரவு அறிதல்-22
---------------------------------------------------------------
மற்றவர்க்கு உதவி செய்தல் கடமை
----------------------------------------------------------------

உயிரைக் காக்கும் மழையிங்கே
கைம்மா றெதையும் கேட்பதில்லை!

மழைமனச் சான்றோர் அதுபோல
உதவிகள் செய்வார் உலகத்தில்!

உழைத்துச் சேர்த்த பொருள்களையோ
தக்கவ ருக்குக் கொடுக்கவேண்டும்!

உழைக்க இயலா தவர்களுக்கே
உதவிகள் செய்யும் நற்செயல்போல்
இங்கும்  மற்ற  உலகிலுமே
காண்பது என்பதே அரிதாகும்!

உதவிகள் செய்பவன் வாழ்பவனாம்
செய்யா தவனோ  நடைப்பிணமாம்!

உதவும் மனிதனின் செல்வங்கள்
தண்ணீர் நிறைந்த ஊர்க்குளமாம்!

இப்படிப் பட்ட செல்வங்கள்
ஊரின் நடுவில் இருக்கின்ற
பழுத்த மரத்தைப் போன்றதிங்கே!

உதவும் மனத்தைக் கொண்டவர்கள்
சேர்த்த செல்வம் மருந்துமரம்
போலப் பயன்படும் இவ்வுலகில்!

செல்வம் இல்லா நிலையினிலும்
சான்றோர் கொடுக்கத் தயங்கமட்டார்!

பிறர்க்கு உதவ முடியாத
கொடுமை நிலைதான் வறுமையாகும்!

கொடுப்பதால் தீமை வருமென்றால்
தன்னை விற்கும் நிலைவரினும்
தீமையை வாங்க முன்வருவார்!

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home