Sunday, November 17, 2019

திருக்குறள் குழந்தைப் பாடல்
--------------------------------------------------------
கூடா ஒழுக்கம் --28
--------------------------------------------------------------------
போலித் துறவறம் இழிவு
--------------------------------------------------------------------
நல்லொழுக்க வேடமிட்டு வல்லூறாய் வாழ்பவரை
உடலுக்குள் உலவுகின்ற ஐம்பூதம் கூடிநின்று
எள்ளிநகை யாடிநிற்கும்! இடித்துரைத்துப் பரிகசிக்கும்!

குற்றத்தைச் செய்பவர்கள் தவக்கோலம் பூண்டாலும்
சற்றுமிங்கே பயனில்லை! புல்கூட மதிக்காது!

மனஅடக்கம் இல்லாதோர் தவவேடம் போடுவது
புலித்தோலைப் பசுஅணிந்து மேய்வதுபோ லாகும்பார்!

தவச்சான்றோன் தீயசெயல் செய்வதுவோ சத்தமின்றி
பறவைக்குக் கண்ணிவைக்கும் ஏமாற்று வித்தையாகும்!

ஆசையை விட்டுவிட்டேன் என்றேதான் பொய்சொல்லும்
கயவனுக்கு உள்ளமே துன்பத்தைத் தந்துவிடும்!

துறவற எண்ணமின்றி பற்றற்ற கோலமிட்டால்
கொடியவர்கள் அவரைப்போல் உலகத்தில் யாருமில்லை!

குன்றிமணி செவ்வண்ணம்  புறத்தினிலே தோன்றினாலும்
குன்றிமணி ஏந்துகின்ற கருநிறத்து மூக்கைப்போல்
காரிருளை அகத்தினிலே கொண்டவர்கள் இங்குண்டு!

மனமெல்லாம் கும்மிருட்டு! குளித்தமணம் உடலெல்லாம்!
இத்தகைய நீசர்கள் இவ்வுலகில் வாழ்கின்றார்!

வளையாத அம்புகளின் செயல்களிங்கே கொடிதம்மா!
வளைந்திருக்கும் இசையாழின் செயல்களிங்கே இனிதம்மா!
தோற்றத்தை விட்டுவிடு! செயலாலே எடைபோடு!

உலகம் பழிக்கும் செயலைத் துறந்துவிட்டால்
தலைமுடி சடாமுடி நீக்குதல் வேண்டாமே!

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home