Thursday, December 24, 2020

38 ஊழ் ( அறம் நிறைவு)

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து


38 ஊழ் ( அறத்துப்பால் நிறைவு)

குறள் 371:

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்

போகூழால் தோன்று மடி.

ஆக்கபூர்வ ஊக்கமா சோர்வில்லை! சோர்வுவந்தால்

ஆக்கம் அழியும் உணர்.

குறள் 372:

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்

ஆகலூ ழுற்றக் கடை.

பேரழிவுச் சூழல்  அறியாமை ஆட்கொள்ளும்!

ஆக்கநிலை கூட்டும் அறிவு.

குறள் 373:

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்

உண்மை யறிவே மிகும்.

என்னதான் கற்றிருந்த போதிலும் நம்முள்ளே

உண்மை அறிவே மிகும்.

குறள் 374:

இருவே றுலகத் தியற்கை திருவேறு

தெள்ளிய ராதலும் வேறு.

ஒருவருக்குச் செல்வம்! ஒருவர்க் கறிவு!

இருநிலை கொண்டதே வாழ்வு.

குறள் 375:

நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும்

நல்லவாஞ் செல்வஞ் செயற்கு.

நல்லதைச் செய்தால் கெடுதியாக, தீயதைச்

செய்தாலோ நல்லவை யாக விளைவுகள்!

எல்லாம் இயற்கையே இங்கு.

குறள் 376:

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்

சொரியினும் போகா தம.

உரியவை எப்படியும் வந்துசேரும்! உனக்கோ

இலையென்றால் தங்காது சாற்று.

குறள் 377:

வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி

தொகுத்தார்க்குந் துய்த்த லரிது.

எதுவெனினும் அப்பயனைத் துய்த்தல் இயற்கை

வகுக்கும் வியூகந்தான் சாற்று.

குறள் 378:

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால

ஊட்டா கழியு மெனின்.

கடக்கவேண்டும்  துன்பத்தால் என்றே இயற்கைத்

தடைவிதித்த காரணத்தால் இங்கே வறியோர்

துறவியாக வில்லை உணர்.

குறள் 379:

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்

அல்லற் படுவ தெவன்.

நல்லதைக் கண்டு மகிழ்பவர்கள் துன்பத்தில்

அல்லல் படுவதேன் சொல்?

குறள் 380:

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினுந் தான்முந் துறும்.

வாழ்வில் இயற்கையின் ஆற்றலே வெல்கிறது!

தோல்விதான் மற்றவைக்கு இங்கு.



0 Comments:

Post a Comment

<< Home