Wednesday, December 23, 2020

36 மெய்யுணர்தல்

 

குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

36 மெய்யுணர்தல்

குறள் 351:

பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்

மருளானாம் மாணாப் பிறப்பு.

பொய்ப்பொருளை மெய்ப்பொருளாய் எண்ணும் அறியாமை

துயரைத் தருமே! உணர்.

குறள் 352:

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி

மாசறு காட்சி யவர்க்கு.

உருமயக்கம் நீங்கியே மெய்த்தோற்றம் கண்டால்

உருவாகும் வாழ்வில் தெளிவு.

குறள் 353:

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்

வான நணிய துடைத்து.

ஐயந் திரிபற வாழ்பவர்க்கு வானம்

உலகினும் பக்கமாம் சாற்று..

குறள் 354:

ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே

மெய்யுணர் வில்லா தவர்க்கு.

மெய்யுணர்வைக் கண்டும் தெளிவடை யாதோர் 

அய்ம்புலன் அடக்கினாலும் வீண்.

குறள் 355:

எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

எப்பொருள் தோற்றமும் ஏமாற்றும்!

மெய்ப்பொருள்

முற்றும் உணர்தலே நன்று.

குறள் 356:

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

மற்றீண்டு வாரா நெறி.

கற்றறிந்து மெய்ப்பொருள் ஏற்ற துறவியர்

சற்றும் விரும்பமாட்டார் இல்லறத்தை மீண்டுமிங்கே!

இத்தகைய பண்பே துறவு.

குறள் 357:

ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப்

பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

ஆய்ந்தறிந்து மெய்ப்பொருளில் தோய்ந்தவர்கள்  மீண்டுமிங்கே

ஆய்வதில்லை இப்பிறப்பை இங்கு.

குறள் 358:

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்

செம்பொருள் காண்ப தறிவு.

பிறவியின் மெய்ப்பொருளைக் கண்டறிந்தே இந்தப்

பிறவி அறியாமை நீக்கு.

குறள் 359:

சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்

சார்தரா சார்தரு நோய்.

ஆர்த்தெழும்  துன்பம் விலகிட துன்பத்தின் 

காரணமான பற்றை விலக்கு.

குறள் 360:

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்

நாமங் கெடக்கெடு நோய்.

ஆசை, வெறுப்பு, அறியாமை இல்லாத

வாழ்வை நெருங்காது கேடு

































 



0 Comments:

Post a Comment

<< Home