Monday, December 21, 2020

33 கொல்லாமை

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

33 கொல்லாமை

குறள் 321:

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்

பிறவினை எல்லாந் தரும்.

அறச்செயல் என்றால் கொலைதவிர்த்தல்! செய்தால்

உறுத்தும் தீவினைகள் சூழ்ந்து.

குறள் 322:

பகுத்துணடு பல்லுயி ரோம்புதல் நூலோர்

தொகுத்தவற்று ளெல்லாந் தலை

பகிர்ந்துண்டும் வாழ்வே சிறப்பாகும்.!

அந்தப்

பகிர்ந்துண்ணும் பண்பே உயர்வு.

குறள் 323:

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்

பின்சாரப் பொய்யாமை நன்று.

பண்பில் சிறந்தது கொல்லாமை! பின்னரே

நன்றென்பார் பொய்யாமை பண்பு.

குறள் 324:

நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்

கொல்லாமை சூழும் நெறி.

இவ்வுலகில் எந்த உயிரையும் கொல்லாமை

நல்லற மாகும் உணர்.

குறள் 325:

நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக்

கொல்லாமை சூழ்வான் தலை.

தலைச்சுமை வாழ்வென அஞ்சித் துறவில்

நுழைவோரைக் காட்டிலும் தீமையென அஞ்சிக்

கொலைசெய்யா தோரே உயர்வு.

குறள் 326:

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்

செல்லா துயிருண்ணுங் கூற்று.

கொல்லாமைப் பண்புடைய மாந்தரைச் சாவுகூட

வெல்லத் தயங்கிநிற்கும் கூறு.

குறள் 327:

தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி

தின்னுயிர் நீக்கும் வினை.

தன்னுயிரே போனாலும் மற்றோர் உயிரைக்

கொன்றெடுக்கும் எண்ணமோ தீது.

குறள் 328:

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்

கொன்றாகும் ஆக்கங் கடை.

கொன்றால்  மலைப்பயன் வந்தாலும் சான்றோர்க்கோ

அந்தநன்மை என்றும் இழிவு.

குறள் 329:

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்

புன்மை தெரிவா ரகத்து.

கொலைபுரிந்து வாழ்வோரைச் சான்றோர் என்றும்

இழிபிறவி என்றெண்ணு வார்.

குறள் 330:

உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்

செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

பிணியில் வறுமையில் வாடுவோரைப் பார்த்து

மனம்பதைக்க பாதகம் செய்திருப்பார் அன்றே

எனச்சொல்வார் சான்றோர் இடித்து.


மதுரை பாபாராஜ்



































0 Comments:

Post a Comment

<< Home