Friday, January 15, 2021

84 பேதைமை

  குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

84 பேதைமை

குறள் 831:

பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண்

டூதியம் போக விடல்.


தீமையை ஏற்றேதான் நன்மையைக் கைவிடுதல்

பேதைமை என்றே உணர்.

குறள் 832:

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை

கையல்ல தன்கண் செயல்.


தன்னால் இயலாத ஒன்றினைச் செய்வதே

பேதைமையுள் பேதைமையாம் சாற்று.

குறள் 833:

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்

பேணாமை பேதை தொழில்.


தீமைக்கு நாணாமை ஏற்றதை நாடாமை

பாமணக்கும் அன்பின்மை காப்பதைக் காவாமை

பேதை இயல்பாகும் சாற்று.

குறள் 834:

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்

பேதையிற் பேதையார் இல்.


கற்றும் உணர்ந்தும் பிறர்க்குரைத்தும்

கற்றதைப்பின்

பற்றாமை பேதையா ராம்.

குறள் 835:

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்

தான்புக் கழுந்தும் அளறு.


இப்பிறவி வாழ்வில் ஏழு தலைமுறைத்

துன்பங்கள் பேதைக்கே உண்டு.

குறள் 836:

பொய்படும் ஒள்றோ புனைபூணும் கையறியாப்

பேதை வினைமேற் கொளின்.


செய்வதைச் செய்யத் தெரியாமல்

பேதையோ

செய்துவிட்டுக் கெட்டழிவான் சாற்று.

குறள் 837:

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை

பெருஞ்செல்வம் உற்றக் கடை.


பேதையின் செல்வத்தால் மற்றவர்க்கே நன்மையாம்!

வாடுவார் சுற்றம் துடித்து.

குறள் 838:

மையல் ஒருவன் களித்தற்றாற் பேதைதன்

கையொன் றுடைமை பெறின்.


பேதைக்குச் செல்வம் கிடைத்துவிட்டால்

பித்தனோ 

போதையில் துள்ளுதல்போல் தான்.

குறள் 839:

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்

பீழை தருவதொன் றில்.


அறிவிலியின் நட்போ இனிமைதான்! அந்தப்

பிரிவிலே துன்பமில்லை கூறு.

குறள் 840:


கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்

குழாஅத்துப் பேதை புகல்.


காலைப் படுக்கையில் வைத்ததுபோல் பேதையோ

சான்றோர் அவைநுழைத லாம்.


மதுரை பாபாராஜ்






































0 Comments:

Post a Comment

<< Home