Wednesday, March 25, 2026

அறிவுடைமை -- 43

 அறிவுடைமை -- 43

----------------------------------------------------------------

அறிவே காக்கும் ஆயுதமாம்!

பகையும் நடுங்கும் கோட்டையாம்!


அலையும் மனதை நல்வழியில்

போகச் செய்யும் அறிவொன்றே!


கருத்தைச் சொல்வோர் யாரெனினும்

மெய்ப்பொருள் காண்பதே அறிவாகும்!


மற்றவர் இங்கே தெளிவாகப்

புரியும் வண்ணம் சொல்லவேண்டும்!


அதிலே உள்ள நுண்பொருளை

ஆய்ந்தே தெளிவது அறிவாகும்!


உயர்ந்தோர் நட்பை வளர்ப்பதே

உலகம் போற்றும் அறிவாகும்!


விரிதல் சுருங்கல் இல்லாமல்

சமநிலை காண்பது அறிவாகும்!


சான்றோர் வழியைப் பின்பற்றி

வாழ்வதே இங்கே அறிவுடைமை!


நாளை வருவதை அறிந்தவரே

அறிவுடை யோராய்த் திகழ்ந்திடுவார்!


அறிய முடியா மாந்தர்கள்

அறிவில் லாதோர் ஆவார்கள்!


அஞ்சுவதற் கஞ்சுதல் அறிவுடைமை!

அஞ்ச மறுப்பதோ அறியாமை!


வருமுன் காக்கும் அறிவுடையோர்

நடுங்கும் துன்பம் எதுவுமில்லை!


எல்லாச் செல்வம் இருந்தாலும்

அறிவில் லாதோர் வறியவர்கள்!


அறிவுச் செல்வம் ஒன்றுடையோர்

எல்லாச் செல்வம் கொண்டவராம்!



0 Comments:

Post a Comment

<< Home