Sunday, February 04, 2007

ஈழத்தமிழினம்!

ஈழத் தமிழினமோ இன்னலுக்குள் சிக்கித்தான்
வாழ வழிதேடி வீதிகளில்-- ஓலமிட்டே
ஓடுகின்ற காட்சிகளை ஊடகத்தில், ஏடுகளில்
போடுகின்றார் ஏங்குகின்றோம்! போ!

அகதிகளாய் திக்கற்று அய்யகோ! அம்மா!
இடம்பெயர்ந்து இந்தியத் தாயின் - அகநதேடி
வந்தே குவிகின்றார்!நாமும் வரவேற்று
தந்தே உதவுகிறோம் சாற்று.

சொந்தமண்ணில் விட்டுத் தொலைத்துவிட்ட வாழ்க்கையை
வந்தமண்ணில் காண வழியில்லை! - என்றாலும்
ஏதோ ஒதுங்க இடங்கிடைத்த நிம்மதியில்
தூதுவிட்டே வாழ்கின்றார் சொல்.

வெங்கொடுமைச் சாக்காட்டில் வெந்துழலும் மக்களுக்குத்
தென்படுமா நம்பிக்கைத் தீர்வொன்று? -- இன்னல்
எரிமலைதான் அங்கே அடங்கிடுமா ?மீண்டும்
வருமோ அமைதியான வாழ்வு?

மத்தியில் ஆள்வோரும் மாநிலத்தில் ஆள்வோரும்
தக்கதொரு தீர்ப்பு தழைப்பதற்கே -- அக்கறை
கொண்டே அணுகினால் கூடிவரும் நல்லமைதி!
வண்டமிழே! வாழ்வை வழங்கு.

0 Comments:

Post a Comment

<< Home