Saturday, November 22, 2008

மனிதன் என்றும் பொம்மை

மண்ணுலகில் பிறந்தவுடன் அன்னை தந்தை
மற்றவர்கள் எண்ணத்திற் கேற்றவாறு
பண்ணமைத்துப் பொன்னரும்பை ஆட்டுவிப்பார்!
பாலரும்புத் தேன்மழலை ஆடி நிற்கும்!
தண்ணிலவாய்த் தவழ்ந்துவரும் குழந்தை இந்தத்
தரணியிலே அனைவரது கைகளுக்குள்
வண்ணத்துப் பூச்சியாகத் தாவித் தாவி
வஞ்சனையே இல்லாத பொம்மையகும்!

அறிவுக்கண் தனைத்திறக்கும் கல்வி தன்னை
ஆர்வமுடன் கற்பதற்குப் பள்ளிக் கூட
அறைக்குள்ளே நுழைகின்ற பருவந் தன்னில்
ஆசிரியர் புகட்டுகின்ற நெறிகள் தம்மை
முறையுடனே மனத்தினிலே பதிய வைத்து
முழுக்கல்வி ஏற்கின்றான்! ஆசான் காட்டும்
நிறைவான பாதையிலே நடக்கும் போது
நித்தமுந்தான் அறிவார்ந்த பொம்மை யாவான்!

இல்லறத்தின் மணிவிளக்கை ஏற்று கின்ற
எழுச்சிமிகு மணவாழ்வில் அடியெடுத்து
நல்லறத்தை நாடுகின்ற உள்ளத் தோடு
நடைபயிலும் பருவத்தில் மனைவி மற்றும்
பலவண்ணச் சுற்றத்தார் எல்லோ ருக்கும்
பாரினிலே நல்லவனாய் இருப்பதர்ற்குப்
பலநிலையில் பலவேடம் ஏந்தும்போது
பரிதாபக் கோலத்தில் பொம்மை யாவான்!

கனியிருப்பக் காய்களையும் அவ்வப் போது
கனிகளையும் சுவைத்துவிட்டுத் தளரும் நேரம்
கனிந்துவரும் முதுமைக்கே அடிமை யாவான்!
கடமைகள் முடிந்ததென ஓய்வை நாடி
இனிமைக்குத் தூதுவிட்டுத் துள்ளும் போதோ
ஈன்றெடுத்தக் குழந்தைகள் திசைக்கொன் றாக
மனம்போன போக்கினிலே பொம்மை யாக்கி
மகிழ்ந்திருக்க மனிதனென்றும் பொம்மை தானே!

0 Comments:

Post a Comment

<< Home