Saturday, November 22, 2008

நிலவின் கோலங்கள் l

ஓரிரவின் தனிமையது! உயிரினங்கள்
ஓய்ந்துவிட்ட நேரமது! அந்த நேரம்
பாரினிலே காதலுக்கு அடிமை யாகி
பாடுகுயில் இரண்டங்கு மயக்கத் தோடு
பேரழகுப் பூவிதழில் வண்டைப் போல
பேரின்பக் களிப்பினிலே மூழ்கி நின்றார்!
ஓரமுதக் காவியத்தைப் படைத்தி ருந்தார்!
ஒளிநிலவோ ரசித்திருந்த கோலம் கண்டார்!

ஓரிரவின் தனிமையது! உயிரினங்கள்
ஓய்ந்துவிட்ட நேரமது! அந்த நேரம்
சேரியிலே குடிசைக்குள் முனகல் ஓசை
"சோறுபோடு பசிக்கிறதே" என்று கேட்டு
நேரிழையாள் தோளினிலே குழந்தை ஒன்று
நெடுநேரம் தேம்பியது! வறுமை தன்னை
வாரித்தான் அணைத்திருந்தார்! நிலவோ வானில்
வாட்டமுடன் ஒளியிழந்த கோலம் கண்டார்!

ஓரிரவின் தனிமையது! உயிரினங்கள்
ஓய்ந்துவிட்ட நேரமது! அந்த நேரம்
வேரிழந்த மரம்போல ஆடி நின்று
விழுந்திருந்தான் நடுத்தெருவில் போதை என்னும்
பேரிடிக்கு பலியானான் அந்தப் பேடி!
பெற்றவளின் வயிறெரிய ஊர்சி ரிக்க
ஓரிடத்தில் படுத்திருந்தான்! நிலவோ வானில்
ஒட்டாமல் தள்ளாடும் கோலம் கண்டான்!

0 Comments:

Post a Comment

<< Home