Thursday, November 06, 2008

வாழ்க்கை வளையம்

தெருவில் திரிகின்ற நாய்கள் வந்து
தெரியாமல் நம்மைக் கடிக்கும் -- தெருநாயில்
எந்தநாய் இங்கே வெறிநாய் ? புரியாது!
அஞ்சித்தான் ஓடுவோம்! பார்.

வட்டமிட்டு மொய்க்கின்ற வண்டொன்று தேடிவந்து
கொட்டிவிடும்! வேதனையோ ஊற்றெடுக்க -- கொட்டும்
வலியில் துடிப்போம்! எப்பக்கம் இந்தக்
கலிவந்து கொட்டியது ? சொல்.

குளவியோ வீட்டுக்குள் சுற்றிப் பறந்து
தலைமீது கொட்ட முனையும் -- நிலைகுலைந்தே
அந்தக் குளவியை விரட்டினாலும் கொட்டிவிடும்!
நொந்து புலம்புவோம் நாம்.

பறந்திருக்கும் காகம் திடீரென்று வந்தே
நடந்துசெல்லும் நம்மைத் தலையில் -- சடக்கென்றே
ஓங்கி அடித்துவிட்டுச் சென்றுவிடும்! யாரைத்தான்
நாமிங்கே நோவது? சொல்.

தேங்கிய நீரில் திளைக்கும் கொசுவினங்கள்
தூங்குகின்ற நேரத்தில் கூட்டமாக -- வான்வழி
வந்தே தடையின்றித் தாக்கிக் கடித்திருக்கும் !
ஏங்குவோம்! தூங்கமாட்டோம் ! இங்கு.

தரையில் படுத்தால் கரப்பான், எறும்பு
வரிசையாய்ப் பூச்சிகள் ஊர்ந்தே -- களித்திருக்கும்!
கண்கள் உறவாடும் தூக்கமின்றி நாள்தோறும்
இங்கே புரண்டிருப்போம்! சொல்.



இயற்கையின் இந்தக் கடிகளைத் தாங்கி
செயற்கையாய்த் தூங்கி விழித்தால்-- துவளவைத்துப்
பார்க்க கடமை வரிசையாய்க் காத்திருக்கும்!
வாழ்வின் நடைமுறைதான் ! பார்.

0 Comments:

Post a Comment

<< Home