Monday, December 22, 2008

நல்லதோர் வீணை

நல்லதோர் வீணை!

என்னதான் இருந்த போதும்
இல்லறத் துணைவி வேண்டும்!
இன்பமோ? அன்றி இங்கே
இன்னலோ? எதுவென் றாலும்
தன்மனச் சுமையின் பங்கைச்
சரிசம மாக ஏற்கும்
நன்மகள் இவள்தான் என்பேன்!
நல்லதோர் வீணை என்பேன்!

நட்பினில் நண்ப னாக
நலந்தரும் செவிலி யாக,
தொட்டுற வாடும் நேரம்
தோகையாள் தென்ற லாக
நுட்பமாய்க் குடும்பத் தேரை
நுணுக்கமாய் இயககும் போது
கற்றநல் அமைச்ச னாகக்
காட்சிகள் ஏந்தி நிற்பாள்!

குடும்பமே இவளை நம்பிக்
குறைவற உலகில் வாழும்!
அடுக்களை மங்கை என்றே
அலட்சியம் செய்ய வேண்டாம்!
மடுவெனும் மனைவி யாகி
மலையெனும் தாயாய் மாறிச்
சுடரொளி வீசி இல்லச்
சுவைகளின் சுனையாய் நிற்பாள்!

மதுரை பாபாராஜ்
1997

0 Comments:

Post a Comment

<< Home