Sunday, December 07, 2008

துடித்திடும் வர்க்கம்

சம்பள நாளைக் காட்டிச்
சட்டெனக் கடனை வாங்கி
அமைதியின் பொய்மை வானை
அளந்திடும் பறவை நாங்கள்!

இமைகளை வலிந்தே மூடி
இரவினில் தூங்கும் வர்க்கம்!
குமுறிடும் நெஞ்சக் கூட்டில்
குறைகளைச் சுமக்கும் வர்க்கம்!

அரித்திடும் கவலை நோயால்
அடிக்கடி தாக்கப் பட்டே
இருதயத் துடிப்பின் எண்கள்
இருமடங் காக மாறி
இருதயத் துடிப்பின் எண்கள்
இத்துணை என்றே கூறும்
மருத்துவக் கணிப்பு தன்னை
மறுத்திடும் வர்க்கம் நாங்கள்!

உடனடித் தேவைக் காக
உலவிடும் வர்க்கம் நாங்கள்!
தடைகளைத் தாங்கித் தாங்கித்
தவித்திடும் வர்க்கம் நாங்கள்!
கடன்களை வாங்கி, நிற்கும்
கடன்களை அடைத்து விட்டுத்
தொடர்கடன் வாழ்வாய் மாறத்
துடித்திடும் வர்க்கம் நாங்கள்!

மதுரை பாபாராஜ்
1989

0 Comments:

Post a Comment

<< Home