Wednesday, November 26, 2008

விலங்கா? மனிதனா?

ஒருபிடி மண்ணுக் குள்ளே
உருத்தெரி யாமல் போகும்
ஒருநிலை இருக்கும் வாழ்வில்
ஓரடி மண்ணுக் காக
செருக்களம் அமைத்துக் கொண்டு
செங்கதிர் சாய்தல் போல
உருளுது தலைகள் இங்கே!
உருப்பட வழிதா னுண்டோ ?

உயிர்களை மதிக்கும் போக்கு
உலகினில் வளர வேண்டும்!
வயல்களில் பதரை நீக்கும்
வகையினில் உயிரைப் போக்கும்
கயவரின் செயலைச் சாடக்
கணைஎனச் சீற வேண்டும்!
முயற்சிகள் முடுக்கப் பட்டு
முனைப்புடன் அமைதி காப்போம்!

அறிவுடன் சிந்திக் காமல்
அடர்வன விலங்கைப் போல
நெறிகளை மிதித்துத் தாண்டி
நினைவினில் காழ்ப்பைத் தேக்கி
வெறியுடன் அலையும் மாந்தர்
வேகமாய் அழிந்தே போவார்!
முறிந்திடும் கிளையைப் போல
முடிந்திடும் இவர்கள் வாழ்வு.

--- மதுரை பாபாராஜ்
1989

0 Comments:

Post a Comment

<< Home