Tuesday, November 25, 2008

மனித இனம் இருக்குமா?

வல்லரசு நாடுகளின் கையில் சிக்கி
வதைபட்டுத் துடிக்கிறதே அமைதி இங்கே !
கொல்லவரும் புலிகூட கருணை கொண்டு
கொல்லாமல் போனாலும் போகக் கூடும்!
நல்லாட்சி நம்மாட்சி ஏழை நாடு
நல்வாழ்வைக் காண்பதற்கே முயல்வோம் என்று
சொல்லாட்சி அரங்கேற்றும் செயல்கள் எல்லாம்
சுடுநேருப்பாய் இருக்குமெனில் அமைதி உண்டோ?

அணுகுண்டுப் போர்க்களங்கள் அமைந்து விட்டால்
அழிந்துவிடும் உயிரினங்கள் சுவடே இன்றி!
அணுவணுவாய் நாகரிகம் வளர்ந்து வந்தே
அச்சாணி யாகத்தான் பண்பில் ஊன்றி
குணக்குன்றில் ஏறுகின்ற நிலையை நாடிக்
குலவுகின்ற நேரத்தில் போட்டி போட்டு
பிணக்குவியல் மலைபோலக் குவியச் செய்யும்
பேரழிவுப் போர்முறையும் தேவை தானா?

உலவுகின்ற உயிரினங்கள் நோய்கள் இன்றி
உலகத்தில் வாழ்வதற்கு வழிகள் காணும்
நிலைதன்னை வல்லரசு நாடு மென்றால்
நிலையான புகழ்மகுடம் அணியக் கூடும்!
அலைபாயும் மனங்கொண்டு கயமை எண்ணம்
அணிவகுக்கும் அணுப்போரைத் தொடரு மென்றால்
கொலைவெறியின் நாயகர்கள் இவர்கள் என்றே
கூறுமடா மனிதஇனம் அன்றி ருந்தால்!

--- மதுரை பாபாராஜ்
1989

0 Comments:

Post a Comment

<< Home