Tuesday, November 25, 2008

கவிக்கடல் பாரதி

எரிமலை அனலினை எங்கெனக் கேட்பதோ
இவனது கவிவரிகள்!
வரிப்புலி வாலினைச் சுருட்டிடும் இவனது
வரிகளின் சவுக்கடியில்!
தரித்திரம் வாழ்வினில் தாண்டவ மாடியும்
தளர்வினைக் கண்டதில்லை!
சரித்திரம் படைத்தவன் சரித்திர மாகியே
சாகா வரம்பெற்றான்!

உரித்ததும் கனிச்சுளை உருவினை இழந்திடும்
உள்ளமும் மறந்துவிடும்!
உரித்திட உரித்திட உயர்கவிச் சுளைகளில்
உள்ளமும் இணைந்துவிடும்!
பரங்கியர் சூழ்ந்தனர் ! இந்தியர் அடிமைப்
பாலையில் புரண்டனரே!
நெருஞ்சியாய் மாறியே பாரதி பரங்கியர்
நெஞ்சினைத் துளைத்துவிட்டான்!

விடுதலைக் கணக்கின் சூத்திரம் போட்டு
விடையினை எழுதியவன்!
அடுக்களைக் கைதியாய்ப் பெண்ணினம் துடிப்பதை
அணையிடக் கூறியவன்!
தடைகளை விதித்திடும் சாதி வெறியினைத்
தகர்த்திடக் கூவியவன்!
படைஎனக் கவியினம் பல்கியே பெருகிடப்
படைப்பினைத் தூவியவன்!

கவியலை பாரதி காவியக் கடலினில்
கணக்கிலா முத்திருக்கும்!
எவ்வகை முத்தினை எடுப்பது என்றுநம்
இதயமோ ஏங்கிவிடும்!
அவ்வகை ஏக்கமோ அகன்றிடும் முன்பே
ஆயுளும் முடிந்துவிடும்!
புதுக்கவி பாரதி ! புகழ்முடிப் பொன்மணி !
புதுமையின் பூபாளம்!

-- மதுரை பாபாராஜ்
1989

0 Comments:

Post a Comment

<< Home