Sunday, November 23, 2008

குழப்பம்

இலக்கியக் காட்சி கற்பனை

விரைந்தேதான் வருகின்ற தேரின் மீது
வினைமுடித்து வருகின்றான் நமது மன்னன்!
திரைமீது கயலாக என்றன் உள்ளம்
சேர்ந்தேதான் துள்ளுதடி! தோழி! தோழி!
கரைபுரண்ட வெள்ளம்போல் இன்பம் என்றன்
கரம்பிடித்துக் கூத்தாடும் நிலையடைந்தேன்!
வரையறுத்த மரபுகளை மீறிப் பெண்மை
வளைந்தாடும் கொடிபோலத் தவழு கின்றேன்!

தேர்போன்ற கலைசிந்தும் அழகு மங்கை
தேர்கண்டு தான்கொண்ட நிலையைத் தானும்
ஆர்வமுடன் தோழியிடம் பகிர்ந்து நின்றே
ஆசையுடன் இருந்தபோது அந்தத் தேரோ
நேர்வழியில் சென்றதுவே நிற்கவில்லை!
நேர்த்தியான தேர்மீது சென்ற மன்னன்
சோர்வுதந்த என்மன்னன் இல்லை தோழி!
சோகத்தின் நிழலாக மாறி விட்டேன்!

-- மதுரை பாபாராஜ் -- 1985

0 Comments:

Post a Comment

<< Home