Tuesday, November 25, 2008

துடிப்பு

கடந்ததே ஒருநாள் என்றே
களிப்பினில் இருந்த வேளை
நடந்திட மறுநாள் இங்கே
நடையினில் நிற்கக் கண்டேன்!
அடைத்தது துன்பம் நெஞ்சை!
அழுதன எந்தன் கண்கள்!
குடைந்தது களைத்த மேனி !
கொடிஎனத் துவண்டே போனேன்!

துயிலினை மறந்து விட்டுத்
துடிப்புடன் உழைத்த போதும்
வயிற்றினில் தீயைத் தேய்க்கும்
வன்பசி தன்னைத் தீர்க்கும்
முயற்சியை எடுக்கக் கூட
முடிந்திட வில்லை அம்மா!
துயரினை எண்ணும் போது
துடிப்பினில் இதயம் துள்ளும்!

பணத்துடன் ஒருவன் மேய்வான் !
பசியுடன் ஒருவன் காய்வான்!
குணமெனும் சோலை நாடும்
குயிலினைக் குரங்கே என்பான்!
தினவெடுத் தாடும் தீமை
தெளித்திடும் சேற்றில் நீந்தும்
கணைமனப் பேடி தன்னை
கடவுளின் பிறவி என்பான்!

-- மதுரை பாபாராஜ்
1989

0 Comments:

Post a Comment

<< Home