Wednesday, November 26, 2008

வாழ்க்கைக் கணக்கு

கூட்டல்
=========
கருவறைக் கூட்டை விட்டே
கலையெழில் குழந்தை யாக
தரணியில் தவழ்ந்தே ஆடித்
தனித்தனி நிலைகள் கண்டு
சுரந்திடும் பண்பில் ஊறிச்
சுளைக்கனி யாகப் பெற்றோர்
கரங்களுக் குள்ளே வாழ்தல்
காவியக் கூட்டல் என்பேன்!

கழித்தல்!
============
உரியநற் பருவந் தன்னில்
உரியவன் ஒருவ னுக்கே
உரியவ ளாக மாறி
உலகமே அவன்தா னென்ற
ஒருநிலை எடுக்கும் போதோ
உறவிழை பெற்றோர் கூட
வரிசையில் இறுதி யாகும்
வாழ்நிலை கழித்த லாகும்!

பெருக்கல்
============
தனக்கெனக் குடும்பம் கண்டு
தனிவழி நடக்கும் போது
கனிநிகர் மழலைச் செல்வம்
கரங்களில் புரளும் காட்சி
மனத்தினை மயங்கச் செய்யும்!
மனங்கவர் கணவ னோடு
மனையினில் சுற்றம் சூழ
மகிழ்வது பெருக்க லாகும்!

வகுத்தல்
==========
உழைத்ததை எல்லாம் வைத்து
உருப்படி யான வாழ்வைப்
பிழைகளின் நிழலே இன்றிப்
பெற்றவர் வகுத்துத் தந்து
நிழலினை நாடும் போது
நிற்பவர் அவர்கள் தாமே!
வழிவழித் தொடரும் இந்த
வகுத்தலே வரலா றாகும்.

மதுரை பாபாராஜ்
1989

0 Comments:

Post a Comment

<< Home